போலீஸிடம் இருந்து தப்பிக்க 4-வது மாடி சன்ஷேடில் பதுங்கிய திருடர்; கீழே விழுந்து பலியான சோகம்

Jun 16, 2026 - 10:01
0
போலீஸிடம் இருந்து தப்பிக்க 4-வது மாடி சன்ஷேடில் பதுங்கிய திருடர்; கீழே விழுந்து பலியான சோகம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யராஜ் (21). மாணவரான இவர் எர்ணாகுளம் கம்மட்டிப்பாடம் ஸ்டார்ஹோம்ஸ் அபார்ட்மென்ட் அருகில் வாடகைக்குத் தங்கி லாஜிஸ்டிக்ஸ் படிப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் எர்ணாகுளம் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கம்மட்டிப்பாடம் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது மூன்றுபேர் கும்பல் கருங்கல்லால் தாக்கியுள்ளது.

பின்னர், அவரிடம் இருந்து ரூ.25,000 மதிப்புள்ள மொபைல் போனை அந்தக் கும்பல் பறித்துள்ளனர். இதுகுறித்து ஆதித்யராஜ் கடவந்தறா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ஃபோர்ட் கொச்சி நெல்லுகடவு ஈரவேலி வீட்டைச் சேர்ந்த முகமது சாஹில் (18). 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் மூவரும் எர்ணாகுளம் நார்த் மேம்பாலத்திற்கு அருகில் உள்ள 'ஹலா ரெசிடென்சி' லாட்ஜில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. அவர்களைத் தேடி போலீஸார் லாட்ஜிக்குச் சென்றனர். போலீஸ் ஜீப் லாட்ஜிக்குக் கீழே நிற்பதை மாடியில் இருந்து பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பிச்செல்லும் நோக்கில் ஓடினர். அதில் முகம்மது சாஹிலும், 17 வயது சிறுவனும் நான்காவது மாடிக்குச் சென்று, அங்கு வெளிப்புறச் சுவரில் இருந்த சன்ஷேடில் ஒளிந்துகொள்ள முயன்றனர்.

அப்போது, முகமது சாஹில் கால் தவறி கீழ்ப்பகுதியில் உள்ள பரமாரா கோவில் நுழைவாயில் நடைபாதையில் விழுந்தார்.

மரணம்
மரணம்

கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வைற்றிலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இதற்கிடையே சன்ஷேடில் மறைந்திருந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். சிறுவன் இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பலியான முகம்மது சாஹில்
பலியான முகம்மது சாஹில்

இவர்கள் மூவரும் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், இதற்கு முன்பும் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பில் இருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் அறையிலிருந்து மாணவனிடம் பறிக்கப்பட்ட மொபைல் போனும், பல போலி அடையாள அட்டைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் திருட்டு வழக்கு குறித்து கடவந்த்ரா போலீசாரும், கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நார்த் போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User