"முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது..." - நடிகை சமந்தா உருக்கம்
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தை ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோருடன் இணைந்து சமந்தா தனது 'டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்' (Tralala Moving Pictures) பேனரின் கீழ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக நடிகை சமந்தா தனியார்செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
அந்தப் பேட்டியில், ``ஒரு சாதாரண பெண்ணான எனக்கு இவ்வளவு பெரிய ஸ்டார்டம் கிடைத்ததும், ரசிகர்கள் திரையில் என் பெயரைப் பார்த்துக் கத்துவதும் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சிதான் என்னை அடுத்தடுத்து ஓட வைத்தது.
ஒருகட்டத்தில் சினிமா எனக்கு ஒரு போதையாகவே மாறிப்போனது. மேலும், ஒரு வருடத்தில் அடுத்தடுத்து நடித்த 5 படங்களும் ஹிட்டானதால், தன்னை 'அதிர்ஷ்டக் கால்' (Golden leg) கொண்டவர் எனப் பாராட்டினர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் தன் திறமையை வளர்த்துக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல், வெறும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளோடு மட்டுமே நான் திருப்தி அடைந்தேன்.
எனது திரை ஓட்டத்தில் நான் பெருமைப்பட முடியாத பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறேன். 2012-ம் ஆண்டிலேயே, எனது திரைப்பயணம் தொடங்கிய 15 நாட்களிலேயே உடல்நலக் குறைவால் படுக்கையில் விழ நேரிட்டது.
ஆனால், அந்த முதல் இடைவெளியில் இருந்து நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகும் ஆண்டிற்கு 5 முதல் 6 படங்கள் எனத் தொடர்ந்து ஓடிக்கொண்டேதான் இருந்தேன். அப்போது வசூலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். நான் திரைத்துறையில் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த இரண்டாவது இடைவெளி வந்தது. நடிகர்களாக இருக்கும்போது நமக்கு ஓய்வே கிடையாது என்ற ஒரு அகம்பாவம் (Ego) வந்துவிடுகிறது.
ஆனால், இந்த நோய் பாதிப்பு என் எண்ண ஓட்டத்தை முழுமையாக மாற்றியது. மீண்டும் சினிமாவுக்குத் திரும்பினால் பழைய வாழ்க்கைப் பாணியை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே பிராண்டுகள், திரைப்படத் தேர்வுகள் என எல்லாவற்றையும் மாற்றி, தற்போது எனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளேன். இப்போது என் வாழ்க்கையை ஒரு தெளிவான நோக்கத்தோடு வாழ்கிறேன்" என்று உறுதியோடு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)