CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!

Jun 15, 2026 - 21:30
0
CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில், இன்று மதியம் 3 மணியளவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்தது. இந்த தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக அக்கட்சியின் நிறுவனர் அபீஜித் திப்கே வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவரைத் தங்களது தோள்களில் சுமந்து முழக்கமிட்டபடி மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், திடீரென அபீஜித் திப்கேவின் கழுத்தில் இருந்த துண்டைப் பிடித்து இழுத்து, அவரை அடுத்தடுத்து பலமுறை கன்னத்தில் அறைந்து கீழே தள்ள முயன்றனர். கூட்ட நெரிசலில் அவர் மீதான தாக்குதல் தொடர்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு தழுவிய போராட்டம்:

ஒரு நையாண்டி அரசியல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட 'காக்ரோச் ஜனதா கட்சி', சமீபத்தில் டெல்லியில் உள்ள மாணவர்களைத் திரட்டித் தங்களது நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அமிர்தசரஸ், புனே, பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அபீஜித் திப்கே வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அவர் பதவி விலகாவிட்டால் டெல்லியில் மீண்டும் மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த இயக்கம் இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர்களின் குரலாக உருவெடுத்து நாடு முழுவதும் விரிவடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அபீஜித் திப்கேவின் எக்ஸ் (ட்விட்டர்) பதிவு:

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபீஜித் திப்கே, ``உடல் ரீதியான தாக்குதல்கள் என்பவை பயம் மற்றும் கோழைத்தனத்தின் அறிகுறியாகும். நாங்கள் எங்களது குரலைத் தொடர்ந்து அமைதியான வழியிலேயே பதிவு செய்வோம். நான் மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றுபவன். இந்த யுத்தத்தை அன்புடனும் அமைதியுடனும் நான் தொடர்ந்து எதிர்கொள்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User