இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்; ரூ.95,000 கோடியைத் திருப்பித் தருகிறது அமெரிக்க அரசு!
இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்திய கூடுதல் சுங்க வரியான ரூ.95 ஆயிரம் கோடியைத் திருப்பித் தரும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக உபரியைக் கொண்ட நாடுகளைக் குறிவைத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுங்கவரி நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி முதல் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர சுங்கவரி விதிக்கப்பட்டது.
பின்னர் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் காரணம்காட்டி ஆகஸ்டு 27-ம் தேதி மேலும் 25 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் 50 சதவீதம் வரை கூடுதல் சுங்கவரி சுமையை எதிர்கொண்டனர்.

சுங்கவரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி மாதம் 20-ம் தேதி அந்த வரிகளை அரசியலமைப்புக்கு முரணானவை என்று அறிவித்து உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக வசூலிக்கப்பட்ட தொகையை ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பி வழங்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விரிவான நிர்வாக வழிமுறைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.95 ஆயிரம் கோடி) அதிகமான தொகை திருப்பி கிடைக்க உள்ளது என்று தொழில் துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றன்ர்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஜவுளி, பொறியியல் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் பல்வேறு உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் அதிக பலன் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் நேரடி தொடர்பு வங்கி இல்லாத இந்திய வங்கிகள் இந்தத் தொகையை எவ்வாறு பெறுவது என்ற குழப்பம் இருந்தது. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, ‘அமெரிக்காவில் கிளைகள் அல்லது முகமை வங்கி வசதி கொண்ட வங்கிகள் மூலமாக வசூல் கணக்குகளைத் திறந்து இந்தத் தொகையைப் பெறலாம்’ என்று தெரிவித்துள்ளது. இதனால் வங்கி தொடர்பான முக்கிய தடைகள் விலகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)