மகளிர் விடுதிக்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்த மளிகைக்கடைக்காரர் - ஒடிசாவில் அதிர்ச்சி
ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் உள்ள கங்காபாடா என்ற இடத்தில் மளிகைக்கடை வைத்திருப்பவர் தீபக் பிரதான்(67). இவரது கடைக்கு அருகில் மகளிர் விடுதி ஒன்று இருக்கிறது. அடிக்கடி அவரது கடை வழியாக பெண்கள் மற்றும் மாணவிகள் விடுதிக்குள் செல்வது வழக்கமாக இருந்தது. இதனை தினமும் பார்த்துக்கொண்டிருந்த தீபக் இரவில் கடையை பூட்டிவிட்டு அருகில் இருந்த மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அங்கு திறந்திருந்த ஒரு அறைக்குள் நுழைந்து உள்ளே இருந்த எம்.பி.ஏ. மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி தீபக்கை கைது செய்தனர். அவர் எப்படி மகளிர் விடுதிக்குள் சென்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
விடுதி பாதுகாவலருக்கு இதில் எதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை போலீஸார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மகளிர் விடுதிக்குள் சென்று 67 வயது நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டிற்குள் முன்னாள் வீட்டுவேலைக்காரன் அத்துமீறி நுழைந்து அவரது 22 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மொபைல் போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் என்ற அந்த நபர் இச்சம்பவத்திற்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் தனது நண்பரின் மனைவியையும் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0