CSK vs GT: "கணிக்க முடியாத பிட்ச், மந்தமான ஃபீல்டிங்" - தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருதுராஜ்
ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 26) நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வி சென்னை ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
போட்டிக்குப் பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "உண்மையைச் சொல்லப்போனால், இந்தத் தோல்வியை விவரிக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருந்தது.
இதற்கு முன் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளின் அனுபவத்தை வைத்து ஒரு கணிப்போடுதான் களமிறங்கினோம். ஆனால், இன்று பிட்ச் எந்த நிலையில் இருந்தது என்றே கணிக்க முடியவில்லை.
சில பந்துகள் வேகம் குறைந்தும், சில பந்துகள் எதிர்பாராத உயரத்தில் எகிறியும் பேட்டர்களுக்குப் பெரும் சவாலை அளித்தன. குறிப்பாக மீடியம் பேஸ் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமாக இருந்தது.
ஒருவேளை நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைக் கொத்து கொத்தாக இழக்காமல் இருந்திருந்தால், நிச்சயம் 170 முதல் 180 ரன்களை எட்டியிருப்போம். அந்த ரன்கள் இந்த பிட்ச்சிற்கு ஒரு சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால், பேட்டிங் பவர்பிளே முடிந்த பிறகும் விக்கெட்டுகள் சரிந்த கொண்டே இருந்தது எங்களை முடக்கிப் போட்டது. 
பேட்டிங் ஒருபுறம் இருக்க, இன்று ஃபீல்டிங்கில் நாங்கள் காட்டிய மந்தமான செயல்பாடு எனக்கு அதிருப்தி அளிக்கிறது. முதல் பந்திலிருந்தே இன்று எங்களுக்கான நாளாக அமையவில்லை. குஜராத் அணி எல்லாத் துறைகளிலும் எங்களை மிஞ்சிவிட்டது.
இருப்பினும், இந்தத் தோல்வியைக் கடந்து, அடுத்த போட்டியில் தவறுகளைத் திருத்திக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம்," என ருதுராஜ் பேசியிருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0