சபரிமலை கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்: தீவிர விசாரணை நடத்தும் பத்தனம்திட்டா எஸ்.பி

Apr 27, 2026 - 10:32
 0
சபரிமலை கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த விவகாரம்: தீவிர விசாரணை நடத்தும் பத்தனம்திட்டா எஸ்.பி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு மேல் மிகவும் தாழ்வாக இந்தியக் கடலோர காவல்படைக்குச் (Coast Guard) சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த 23-ம் தேதி பறந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது.

கோயிலில் இருந்து சுமார் 5 மீட்டர் உயரத்தில் அந்த ஹெலிகாப்டர் பறந்துள்ளது. ஹெலிகாப்டர் பறந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு மேல்பகுதியில் ஹெலிகாப்டர் பறந்த சமயத்தில் அதில் இருந்த வீரர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுப்பது போன்ற காட்சிகளும் வெளியாகி இருந்தன.

கொச்சியில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் மோசமான காலநிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக திசைமாறி பறந்ததாக இந்தியக் கடலோர காவல்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை முதல் நிலக்கல் வரையிலான பகுதிகள் சிறப்புப் பாதுகாப்பு மண்டலமாக கேரள மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக பம்பா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஏர் டிராபிக் கண்ட்ரோலரிடம் தகவல் கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்தது சம்பந்தமாக சபரிமலை சிறப்பு ஆணையர் கேட்டதற்கு இணங்க சபரிமலை நோடல் ஆபீசர் ஏ.டி.ஜி.பி ஸ்ரீஜித் முதற்கட்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த காட்சிகள்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மீது ஹெலிகாப்டர் பறந்த காட்சிகள்

வானிலை மாற்றங்கள் காரணமாக ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறக்க நேர்ந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கோ தெரிவிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பறந்தது ஆபத்தான செயல், இது சம்பந்தமாக இந்தியக் கடலோர காவல்படை அளித்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. இது குறித்த விரிவான விசாரணை நடத்தும் பொறுப்பு பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்.பி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்
சபரிமலை கோயில் மீது பறந்த ஹெலிகாப்டர்

இது குறித்து பத்தனம்திட்டா போலீஸ் எஸ்.பி ஆனந்த் கூறுகையில், "சபரிமலை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை பறக்க அனுமதி இல்லை.

அவர்கள் டைவர்ட் ஆகி வந்ததாகக் கூறியுள்ளனர். அது பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்திருப்பது உள்ளிட்டவை குறித்தும் முழுமையாக விசாரித்து வருகிறோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0