`ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்டோரும்...' - பாஜகவில் இணைந்த ராகவ் சதா தகவல்!
ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பாடக், அசோக் மிட்டல், ராஜேந்தர் குப்தா, விக்ரம் சாஹ்னி ஆகிய 7 எம்.பி-க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருக்கின்றனர்.
இதில் எம்பி ராகவ் சதா ஆம் ஆத்மியில் இருந்து விலகி , பாஜகவில் இணைந்திருக்கிறார்.
தவிர ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் இருவரும் பாஜகவில் இணையயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய ராகவ் சதா, "ரத்தம், வியர்வையை சிந்தி, 15 ஆண்டுகளாக நான் வளர்த்தெடுத்த கட்சி அறநெறிகளில் இருந்து விலகிவிட்டது.
ஆம் ஆத்மி கட்சி நாட்டின் நலனுக்காக செயல்படாமல் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவே செயல்படுகிறது.
தவறான கட்சியில் சிக்கிக் கொண்ட சரியான நபர் என்ற மனநிலை சில ஆண்டுகளாக எனக்குத் தோன்றியது.
ஊழலை ஒழிக்க வந்த கட்சி, இப்போது ஊழல் கட்சியாகிவிட்டதால் விலகுகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் ஏழு எம்.பி.க்கள் அக்கட்சியை விட்டு வெளியேறியிருப்பது, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 
இந்தத் திடீர் அரசியல் மாற்றம் நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பலத்தையும் கணிசமாகக் குறைத்திருக்கிறது.
இது வரவிருக்கும் தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0