தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

Aug 07, 2026 - 14:01
0
தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சட்டவிரோதக் கடத்தலை தடுக்கும் வகையில் க்யூ பிரிவு போலீஸார் கடலோரப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு வெள்ளாடுகள் மற்றும் புறாக்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு தகவல் கிடைத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளாடுகள், புறாக்கள்

இதையடுத்து, க்யூ பிரிவு போலீஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் பதிவு எண் இல்லாத இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஃ பைபர் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 8 வெள்ளாடுகள் மற்றும் 3 கூண்டுகளில் அடைக்கப்பட்ட புறாக்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸாரைக் கண்டதும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, 8 வெள்ளாடுகள், 3 பெட்டிகளில் இருந்த புறாக்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஃபைபர் படகு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளாடுகள் மற்றும் புறாக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு காவல் நிலையம்

கடத்த முயன்ற வெள்ளாடுகள் இறைச்சிக்காகவும், புறாக்களில் பெரும்பாலானவை பந்தயப் புறாக்கள் எனவும் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கடத்தல் கும்பலை பிடிக்க க்யூ பிரிவு மற்றும் வடக்கு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User