`ஒரு எருமை மாட்டுக்கு உரிமை கோரும் இருவர்' - உரிமையாளரை முடிவு செய்ய டி.என்.ஏ. சோதனை

Aug 27, 2026 - 12:31
0
`ஒரு எருமை மாட்டுக்கு உரிமை கோரும் இருவர்' - உரிமையாளரை முடிவு செய்ய டி.என்.ஏ. சோதனை

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் அட்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுர் என்ற கிராமத்தில் ஒரு எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கோருவதால் பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இதே பகுதியை சேர்ந்த சூரஜ் யாதவ் என்பவரின் எருமை மாடு சமீபத்தில் காணாமல் போனது. அதனை யாதவ் பல இடங்களில் தீவிரமாகத் தேடினார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

எருமையைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நௌரங்கா டோலி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மன்ஜியின் வீட்டில் அந்த எருமை இருப்பதாக யாதவிற்கு தகவல் கிடைத்தது.

உடனே சூரஜ் அந்த கிராமத்திற்கு சென்று பிரகாஷ் வீட்டில் இருந்த எருமை மாட்டை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த எருமை மாடு தனக்குறியது என்று பிரகாஷ் தெரிவித்தார். எருமை மாடு தனக்கு உரியது என்று கூறி உள்ளூர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டார்.

அஜய் யாதவ்

உடனே போலீஸார் எருமை மாட்டுடன் போலீஸ் நிலையம் வரும்படி சூரஜிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சூரஜ் எருமை மாட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். மாடு போலீஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. சூரஜ் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடினர். அதோடு ஒரு பத்திரிகையாளர் எந்த அடிப்படையில் மாட்டை போலீஸ் நிலையத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதால் மாட்டை சூரஜிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

இதில் திருப்தியடையாத பிரகாஷ் இது குறித்து சூரஜ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் செய்தார்.

இப்பிரச்னை உள்ளூர் ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ.அஜய் யாதவ் என்பவரிடம் சென்றது. அஜய் யாதவ் இது குறித்து மாநில டிஜிபியிடம் இப்பிரச்னையை கொண்டு சென்றார். இது குறித்து அஜய் யாதவ் கூறுகையில்," ஒரு எருமை தொடர்பான தகராறில் எஸ்சி/எஸ்டி (SC/ST) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக ஒரு ஏழை நபர் செலவழிக்கும் பணத்தைக் கொண்டே இன்னொரு எருமையை வாங்கிவிட முடியும். போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் மீதும் கூட வழக்கு பதிவு செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.

இது தவிர ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவரும் டிஜிபியை சந்தித்து இது குறித்து பேசினார். இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண எருமை மாட்டிற்கு டி.என்.ஏ.சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு டிஜிபி உத்தரவிட்டார். காணாமல் போன மாட்டின் தாய் அதே கிராமத்தில் இருந்தது. எனவே அந்த மாட்டின் டி.என்.ஏ.வோடு ஒத்துப்பார்த்து மாட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படுமாம்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User