MK Stalin: "கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்" - ஸ்டாலின் வேண்டுகோள்

May 22, 2026 - 13:02
0
MK Stalin: "கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்" - ஸ்டாலின் வேண்டுகோள்

தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்றிருக்கிறது.

திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

விசிக Vs திமுக
விசிக Vs திமுக

அமைச்சரவையில் பங்கேற்பதாக நேற்று அறிவித்ததிலிருந்து திமுகவினர், விசிகவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விசிகவை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போட்ட பதிவிற்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் விசிக அமைச்சரவையில் பங்கேற்றிருப்பது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர், "மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.

பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம்.

நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User