பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை; பட்டாசு வெடித்து வரவேற்ற பாஜக-வினர்

Aug 03, 2026 - 14:30
0
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை; பட்டாசு வெடித்து வரவேற்ற பாஜக-வினர்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க-வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகள் தொடுத்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து டெல்லி நீதிமன்றத்தால் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், டெல்லியிலுள்ள மல்யுத்தக் கூட்டமைப்பு அலுவலகம், பிரிஜ் பூஷனின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின்போது தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனைகள்

இதில் மைனர் வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் அந்த வீராங்கனை புகாரைத் திரும்பப் பெற்றதால் அவ்வழக்கு முடிக்கப்பட்டது.

ஜூன் 15, 2023 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354 (பெண்ணின் கண்ணியத்தைக் குலைத்தல்), 354A (பாலியல் துன்புறுத்தல்), 354D (பின்தொடர்ந்து தொல்லை தருதல்) மற்றும் 506(1) (மிரட்டல் விடுத்தல்) ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மே 2024-ல், 5 வீராங்கனைகளின் புகார்களின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கப் போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி அஸ்வினி பன்வார் அமர்வில், ``இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனும், இரண்டாம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்" என்றார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்

விடுதலையான பிரிஜ் பூஷனை மாலை மரியாதையுடனும், பட்டாசு வெடித்தும் பா.ஜ.க தொண்டர்கள் வரவேற்றனர். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், ``வழக்கு தொடங்கிய முதல் நாளிலேயே என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். இன்று நீதிமன்றம் என்னை கௌரவமான முறையில் விடுவித்துள்ளது. இது எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User