Kaadhal Saranya: ``பசிக்கு அன்னதானம் சாப்பிட்டிருக்கேன்; அன்று ஒரு யாசகர் செய்த உதவியால்..."- சரண்யா

Aug 03, 2026 - 20:00
0
Kaadhal Saranya: ``பசிக்கு அன்னதானம் சாப்பிட்டிருக்கேன்; அன்று ஒரு யாசகர் செய்த உதவியால்..."- சரண்யா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சரண்யா, 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' படத்தில் ஹீரோயின் சந்தியாவுக்கு தோழியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.

தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் 5 ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

இதற்கிடையில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் 'Sawswag' யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை சரண்யா
நடிகை சரண்யா

அவரின் பேட்டியின் ஒருபகுதியில், ``எனக்கு 19 வயது இருக்கும்போது, நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். என் அம்மா வேறொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துச் சென்றுவிட்டதால், நான் தனியாக வர வேண்டியதாயிற்று.

வெளியே வந்த புதிதில் உணவிற்கே மிகவும் கஷ்டப்பட்டேன். அந்தச் சமயத்தில்தான் நான் நடித்த 'பேராண்மை' திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால், அதன்பிறகு எனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

நான் PG விடுதியில் தங்கி, தனியாகவே வாழ்ந்து வந்தேன். அப்போது உணவிற்காக மிகவும் சிரமப்பட்ட நாள்கள் உண்டு. இன்றைக்குச் சிலர், கோவில்களில் அன்னதானம் வழங்குவதால் என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்று கேட்கிறார்கள். ஆனால், கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பி என்னைப்போன்ற நபர்கள் எத்தனை நாட்கள் சாப்பிட்டிருக்கிறோம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

நடிகை சரண்யா
நடிகை சரண்யா

அப்போது நான் கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றுதான் மதிய உணவு சாப்பிடுவேன். ஒரு சாதமும் ஒரு குழம்பும் மட்டுமே இருக்கும் வேறு எதுவும் இருக்காது. ஆனால், அந்தச் சூழ்நிலையில் அதுவே எனக்கு ஒரு பெரும் உணவாக இருந்தது. தினமும் அந்த உணவை உண்பதற்காக அவசரமாகச் செல்வேன். ஒருநாள் நேரம் கடந்துவிட்டதால், பையை மாட்டிக்கொண்டு ஓடோடிச் சென்றேன்.

ஏனெனில், அங்கு 25 அல்லது 50 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுப்பார்கள். அந்த டோக்கன் வைத்துள்ள நபர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். நான் பதற்றத்தோடு ஓடி வந்தபோது, அங்கு யாசகம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னை அழைத்து, "பாப்பா, இங்கே வா! நான் உனக்காக இடம் பிடித்து வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.

நடிகை சரண்யா
நடிகை சரண்யா

அவர் யாசகம் எடுப்பவர் என்பதால் நான் அவரை ஒருநாளும் குறைவாகப் பார்த்ததில்லை. சூழ்நிலையை வைத்து யாரையுமே நாம் தவறாக எடைபோடக் கூடாது. அன்றைய தினம் அந்தப் பெரியவர் எனக்காக இடம் பிடித்து வைத்திருக்கவில்லை என்றால், அன்றைய நாள் எனக்கு உணவே கிடைத்திருக்காது.

என் வாழ்க்கைச் சூழ்நிலை சரியில்லை என்பதால், அன்று அவர் என் வாழ்வில் இருந்தார். பிற்காலத்தில் என் வாழ்க்கைச் சூழ்நிலை சீரான பிறகு, அவரைத் தேடிப் பிடித்து உதவி செய்ய வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன். ஆனால், அவர்கள் ஒரே இடத்தில் இருக்காமல் இடம் மாறிக்கொண்டே இருப்பவர்கள் என்பதால், என்னால் அவரை மீண்டும் பார்க்கவே முடியாமல் போய்விட்டது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User