மதுரை மீனாட்சியம்மன் கோவில்: "அபிஷேக தீர்த்த கிணறு அருகிலேயே குப்பைகள் தேக்கம்" - அண்ணாமலை புகார்

Aug 03, 2026 - 19:00
0
மதுரை மீனாட்சியம்மன் கோவில்: "அபிஷேக தீர்த்த கிணறு அருகிலேயே குப்பைகள் தேக்கம்" - அண்ணாமலை புகார்

மதுரையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பாக வைகை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீ த லீடர்ஸ் அமைப்பினரிடையே பேசிய அண்ணாமலை, “இன்று 500 முதல் 1000 பேர் வரை பங்கேற்றுள்ளனர். அடுத்த வாரம் கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், நடைபயிற்சி குழுவினர் உள்ளிட்ட புதியவர்களை அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு வாரமும் புதிய தன்னார்வலர்கள் இணைந்தால்தான் இந்தப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற முடியும்.

சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் யாரும் குப்பை கொட்டுவதில்லை. காரணம், அங்கு சுற்றுப்புறம் சுத்தமாக இருப்பதால் பொதுமக்களிடையே பொறுப்புணர்வு உருவாகியுள்ளது. அதே உணர்வை மதுரையிலும் உருவாக்க வேண்டும். சுத்தமான சூழலை உருவாக்கினால், மக்கள் தாமாகவே குப்பை கொட்டும் பழக்கத்தைக் கைவிடுவார்கள்.

அரசியல் மேடைகளில் பேசுவதைவிட களத்தில் இறங்கி பணியாற்றுவதே சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் 602 இடங்களில் நடத்தப்பட்டு, சுமார் 40 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.

குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை
குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை

அதேபோல், கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை 175 கிலோமீட்டர் கடற்கரையை ஓராண்டுக்குள் சுத்தப்படுத்தும் இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே மாதிரி வைகை ஆற்றையும் 52 வாரத்திற்குள் சுத்தப்படுத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் தோன்றி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சுமார் 258 கிலோமீட்டர் பயணிக்கும் வைகை ஆறு, 8,000 சதுர கிலோமீட்டர் ஆற்றுப்படுகையைக் கொண்ட முக்கிய நதி.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குப்பைகளை முழுமையாக அடித்துச் செல்லாது; மண்ணுக்கடியில் பல ஆண்டுகளாக குப்பைகள் புதைந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்ற வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அபிஷேக தீர்த்தம் எடுக்கப்படும் பழமையான கிணறு அருகிலேயே குப்பைகள் தேங்கி இருக்கின்றன. அவை நிலத்தடி நீரை மாசுபடுத்தும்.

குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை
குப்பைகளை அகற்றும் பணியில் அண்ணாமலை

வயதானவர்கள் மற்றும் பெண்கள் அதிக நேரம் உழைக்காமல் அவர்களால் முடிந்த அளவு வேலை செய்தால் போதும். அடுத்த வாரம் நடைபெறும் தூய்மைப் பணிக்கு ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவரையாவது புதிய தன்னார்வலராக அழைத்து வர வேண்டும்.

இதில் கல்லூரி மாணவர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மேடைகளில் பேசுவதற்குப் பதிலாக களத்தில் இறங்கி பணியாற்றுவோம். மாறுவோம், மாற்றுவோம். நமது ஊர், நமது வைகை, நமது பொறுப்பு என்பதை உணர்ந்து அனைவரும் இந்த மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User