"என் சர்டிபிகேட்டைக் காண்பிக்கிறேன்; பேரரசர் தன் டிகிரியைக் காட்டுவாரா?"- யாரைச் சொல்கிறார் அபிஜித்?

Aug 03, 2026 - 16:00
0
"என் சர்டிபிகேட்டைக் காண்பிக்கிறேன்; பேரரசர் தன் டிகிரியைக் காட்டுவாரா?"- யாரைச் சொல்கிறார் அபிஜித்?

''டெல்லி மாணவர்கள் போராட்டத்தை வழிநடத்தி முன்னெடுத்த காக்ரோஜ் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அமெரிக்காவிற்குச் சென்று படிக்க பணம் எப்படி கிடைத்தது? அவர் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுதான் இந்தப் போராட்டத்தை நடத்தினார்'' என பா.ஜ.க-வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஐ ஆர்வலர் அமித் திவாரி, மகாராஷ்டிர தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் (MIDC) ஓய்வுபெற்ற இளநிலைப் பொறியாளரான தீப்கேவின் தந்தை பகவான்ராவ் தீப்கேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிர அரசு உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

மாதத்திற்கு சுமார் 60,000 முதல் 65,000 வரை சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரால், தனது குழந்தைகளை உயர்கல்விக்காக அமெரிக்காவிற்கு எப்படி அனுப்ப முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

இந்த ஆர்.டி.ஐ குறித்து வீடியோ வெளியிட்ட அபிஜித் தீப்கே, ``பாஜகவைச் சேர்ந்த ஒரு தொண்டர் என் மீது ஆர்.டி.ஐ தாக்கல் செய்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன். நான் எனது கல்வியை எவ்வாறு முடித்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.

நான் என் கல்விச் சான்றிதழையும், கல்விக்கான உதவித்தொகைப் பெற்ற சான்றிதழையும் காட்டத் தயார்... அதேபோல உங்கள் பேரரசர் தன் உண்மையான டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா?

எனக்கு புரியவில்லை, இந்த மக்களுக்குக் கல்வியின் மீது ஏன் இவ்வளவு பிரச்னை என்று! ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பையன் போஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்துவிட்டு வந்தால், இவர்களுக்கு ஏன் இவ்வளவு வலி ஏற்படுகிறது? நீங்கள் ஏன் கல்விக்கு இவ்வளவு எதிராக இருக்கிறீர்கள்?"

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை (Scholarship) மற்றும் கல்விக் கடன் மூலமே எனது உயர்கல்வி சாத்தியமானது. எனது கல்விக்கான நிதியை போஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகையே பூர்த்தி செய்தது. மேலும், நான் சில கல்விக் கடன்களையும் வாங்கியுள்ளேன், அதை நான் இப்போது திருப்பிச் செலுத்த வேண்டும்.

மோடி
மோடி

சி.ஜே.பி கட்சி இனிவரும் காலங்களில் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் 'க்ரவ்ட்ஃபண்டிங்' (Crowdfunding) முறையைப் பின்பற்றும். அதில் நாங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்போம். பெரும்பாலான ஆதரவு சாதாரண மக்களிடமிருந்தே நேரடியாக வந்ததது. போராட்டத்திற்கு வந்த மக்கள், எங்களுக்கு உணவுகளைத் தானமாக வழங்குவதைப் பார்த்திருப்பீர்கள். மக்கள் தங்களது சொந்த தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வந்தார்கள்.

டெல்லி போலீஸைச் சேர்ந்த சிலர் எங்களிடம் வந்து, 'நாங்கள் உங்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்குகிறோம், ஆனால் எங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம்' என்று கூறினார்கள். தங்களது குழந்தைகளும் நீட் தேர்வுக்குத் தயாராகி வருவதால், இந்த நோக்கத்தின் மீது தங்களுக்கு அனுதாபம் இருப்பதாகக் கூறி தண்ணீர் பாட்டில்களை வழங்கினார்கள்" எனக் குறிப்பிட்டு, பேட்டியின் இடையிலேயே அவரின் கல்வி உதவித்தொகைச் சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதலைக் காண்பித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User