அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

Jun 13, 2026 - 22:31
0
அதிமுக-வில் மிதுனுக்கு முக்கிய பொறுப்பு? நிர்வாகிகள் வலியுறுத்தல்; கவனம் பெற்ற கே.பி முனுசாமி பேச்சு

தேர்தல் தோல்விக்கு பின்னர், கட்சியின் நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்க அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து ஆலோசித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிலர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கட்சியின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்க வலியுறுத்தியுள்ளது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

மாவட்ட நிர்வாகிகளாக முன்னாள் எம் பி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பகுதிச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர்

பேசியபோது, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கட்சியின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நியமிக்க வலியுறுத்தினர். அதற்கு தனக்கு அதில் விருப்பம் இல்லை என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து யாரும் பேச வேண்டாம் என்று தெரிவித்தாலும், அதன்பின் அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கேபி முனுசாமி பேசியது தான் கூட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பின், கட்சியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் நாம் அனைவருக்கும் இருப்பதாகவும், அதனால் கட்சிக்கு இளைஞரணி செயலாளராக மிதுனை நியமிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மிதுன் குமார்

அவரை நியமிக்க வேண்டுமா வேண்டாமா என்பது கட்சியின் பொதுசெயலாளர் என்ற முறையில் அவரது முடிவு என்றாலும், கட்சியின் நலன் கருதி மிதுன் கட்சிக்குள் வர வேண்டும் என்று நினைத்தால் அதனை பொதுசெயலாளர் என்ற முறையில் தடுக்க கூடாது என்று பேசியதும், பலரது புருவங்கள் உயர்ந்துள்ளது. கேபி முனுசாமி பேசியதை கவனமுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் நம் கட்சியில் இருந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளே வேறு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களை கட்சிக்குள் கொண்டுவந்து பொறுப்புகள் கொடுக்காததும் காரணமாக அமைந்துவிட்டது.

எவ்வளவு நாள் தான் வாரிசு அரசியல், கட்சிக்குள் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க கூடாது என்று பேசுவது, கட்சியை மேலும் கட்டமைக்கும் பணியை நம் குடும்பத்திலிருந்தே நாம் தொடங்க வேண்டும். அதற்கு அவர்களை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று நிர்வாகிகள் பேசியுள்ளதை அதிமுக பொதுசெயலாளர் கவனமுடன் கேட்டிருக்கிறார்.

ஸ்டாலின், உதயநிதி

மிதுனை கட்சிக்குள் கொண்டுவந்து பொறுப்பு கொடுத்தால் திமுகவின் வாரிசு அரசியலை பற்றி பேச முடியாது, ஆட்சியில் இருப்பது தவெக என்றாலும் திமுகவின் எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம் அதிமுக என்பதால் திமுகவின் மையப்புள்ளியாக இருக்கும் வாரிசு அரசியலை எப்படி விமர்சிப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது.

கட்சியின் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியின் குரலாக பொதுவெளியில் ஒலிக்கும் கேபி முனுசாமியே இப்படி பேசியிருப்பது அரசியல் ரீதியாக கவனிக்க வேண்டியுள்ளது.

என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி ? பொறுத்திருந்து பார்ப்போம்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User