அகிலம் போற்றும் ஆழித்தேர் : 350 டன் எடை, 96 அடி உயரம், 320 அடி நீள வடம்.! களைகட்டும் திருவாரூர்!

Mar 28, 2026 - 08:32
 0
அகிலம் போற்றும் ஆழித்தேர் : 350 டன் எடை, 96 அடி உயரம், 320 அடி நீள வடம்.! களைகட்டும் திருவாரூர்!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்டம் நாளை(29.3.26) நடக்க இருக்கிறது. இதையொட்டிக் கடந்த ஒருவாரமாகத் தேரை அலங்கரிக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்றன. நாளை கம்பீரமாக தேர் வீதி உலாக் காணத் தயாராக உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்று ஆழித்தேர். சுமார் 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்டது. தேரோட்டம் நடைபெறும் நாளில் திருவாரூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். 'ஆரூரா... தியாகேசா' என்னும் கோஷங்கள் முழங்க மாபெரும் கப்பலைப்போல ஆழித்தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து அசைந்து வருவதைப் பார்க்கக் கண் கோடி வேண்டும்.

ஆழித்தேர்

ஆழித்தேரானது காலத்தால் முற்பட்டது என்பார்கள். பல யுகங்களுக்கு முன்னால் தேவேந்திரனால் தயார் செய்யப்பட்டு தேவலோகத்தில இருந்து பூலோகம் வந்து சேர்ந்தது என்கிறது தலபுராணம். முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்தத் தேரோடுதான் தியாகராஜப் பெருமானை பூலோகத்தில் எழுந்தருளச் செய்தார் என்பார்கள். காலமாற்றத்தில் ஆழித்தேரின் கட்டுமானங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் கலியுகத்திலும் இதன் கம்பீரம் மட்டும் குறையவேயில்லை. இப்படிப்பட்ட புராண சிறப்பைக் கொண்ட இந்தத் தேரோட்டத்தை பக்தர்கள் வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் 18 விதமான வாத்தியங்களை இசைத்தும் ஆரவாரமாக நடத்துவார்கள்.

தியாகராசருக்கு தேர்பவனி நிகழ்வானது ஆண்டுதோறும் மாசி மாசம் அஸ்த நட்சத்திர தினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கப்படும். அடுத்துவரும் ஆயில்ய நட்சத்திர நாளில் தேர்பவனி நடைபெறும். இங்கே பெருமானின் திருப்பாத தரிசனம் மிகவும் சிறப்பு. மார்கழி திருவாதிரைக்கும், பங்குனி உற்சவத்திற்கும் மட்டுமே இந்தப் பாத தரிசனத்தைப் பெற முடியும். இதைக் காணவும் ஆரூரில் பக்தர்கள் குவிவார்கள்.

ஆழித்தேருக்குக் கூடுதல் அழகு சேர்ப்பவை அதில் அமைந்துக்கும் குதிரை, பாம்பு, யாழி யாளங்கள் போன்ற சிற்பங்களே. கண்களை கவரும் ஆழித்தேரினை அலங்கரிக்கும் பொம்மைகள், குதிரைகள் மற்றும் அலங்காரதட்டுகள் போன்ற 68-க்கும் போன்ற பொருள்கள் தேவைப்படுகின்றன.

ஆழித்தேரை அலங்கரிக்கும் குதிரைகள்

தேரின் முன்பகுதியில் அமைந்திருக்கும் நான்கு குதிரைகளும் மிக பிரம்மாண்டமானவை. ஒவ்வொரு குதிரையும் சுமார் 26 அடி நீளம் கொண்டது. நான்கு வேதங்களையும் நான்கு குதிரைகளையும் பூட்டி நான்முக கடவுள் பிரம்மதேவர் தேரின்‌ மேல் அமர்ந்து சாரதியாகத் தேரை இயக்குவார் என்பது ஐதிகம். நான்கு குதிரைகளுக்கும் இடையில் பாம்பு யாளம், குந்தி யாளம், குடியாளம் என்று ஐந்து வகையான யாளங்கள் அமைந்து இத்தேரின் அழகை மேலும் மெருக்கேற்றுகின்றன.

இரண்டு உடம்பும் ஒரே தலையும் கொண்ட ரிஷபம் தேரின் கோபுரத்தில் இடம் பெறும். தேரின் நான்கு மூலைகளிலும் ஈசானம், தத்ப்ருஷம், அகோரம், வாமதேவம் என நான்கு விதமான ரிஷபங்கள் கலைநயம் மிக்க தூண்களாக அழகாகத் தேரைத் தாங்கி நிற்கின்றன. மேல் கம்மாளம், கீழ்கம்மாளம், கேடையம், கத்தி, வில், அம்பு, அம்பலதோனி போன்ற எட்டிற்கும் மேற்பட்ட தூண்கள் இடம்பெறும். மேல்கிராதி, கீழ்கிராதி, பெரிய கத்தி கேடயம், பூக்குடம், ராஜாராணி, கிழவன் கிழவி, சுருட்டி, இலை, அம்பாரத்தோணி போன்ற அம்சங்களும் ஆழித்தேரினை அலங்கரிக்கின்றன.

ஆழித்தேர் இவ்வளவு பிரமாண்டமாகத் திகழ்வதற்கான பெருமை பலமாத காலம் இதற்காகக் கடுமையாக உழைக்கும் கலைஞர்களையே சேரும். குறிப்பாக சு.கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் இந்த வேலையைத் தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகிறார்கள்.

திருவாரூரில் தேர் செய்யும் கலைஞர்கள்

அத்தேரானது பார்பதற்கு கம்பீரமாகவும் இந்த தேரேயே குதிரைகள்தான் இயக்குவது போலவும் காட்சியளிக்கும். ஆழித்தேரில் 320 அடி நீளம் கொண்ட நான்கு வடங்கள் பொருத்தப்பட்டிருக்கும். 24 அங்குலம் சுற்றளவு கொண்ட ஒவ்வொரு வடமும், மிகவும பிரமாண்டமானது. பக்தர்கள் அந்த வடத்தினைத் தூக்கி பிடித்து, 'ஆரூரா தியாகசா' என்று கோஷம் எழுப்பி இழுக்க ஈசனோ அழகாக அஜபா நடனம் ஆடி வருவார். இப்படிப்பட்ட அற்புதமான ஆழித்தேர்பவனி நாளை நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் திருவாரூரில் குவியத் தொடங்கிவிட்டனர் . வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் தரிசிக்க வேண்டியது இந்த ஆழித் தேர்த் திருவிழா. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஆழித்தேரினை தரிசனம் செய்து அருள்பெறுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0