"வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக பரவும் தகவலுக்கு சுரேஷ் சந்திரா விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார்கள். 
அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலோடு கிடைக்கும் பேருந்துகளில் மக்கள், அவர்களின் சொந்த் ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
நடிகர்கள், அரசியல் கட்சியினர் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். நடிகர் அஜித்தும் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்தார்.
அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் "மாற்றம் தேவைப்படுகிறதா?" எனக் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அஜித் "மாற்றம் தேவையில்லை" எனப் பதிலளித்ததாகவும் இணையத்தில் தகவல்கள் பரவின. 
இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அந்தத் தகவலுக்கு விளக்கமளித்திருக்கிறார். அவர், "வதந்தியைப் பரப்ப வேண்டாம். 'மாற்றம் தேவை' என்றோ அல்லது 'தேவையில்லை' என்றோ அஜித்குமார் எந்தத் தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை" என விளக்கமளித்திருக்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினிடம், "அஜித் மாற்றம் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறாரே, அது பற்றிய உங்களின் கருத்து என்ன?" எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது நல்ல விஷயம் தானே" எனப் பதிலளித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0