"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" - சீமான்
தமிழகமெங்கும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது.
வாக்குப்பதிவு தொடங்கியதும், முதல் ஆளாக வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். வாக்குச் செலுத்திய பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அதில் அவர், "நமக்கு இருக்கிற கடைசி வலிமை வாக்குதான். அதை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். 75 சதவீத மக்கள் மட்டுமே வாக்களிக்கும்போது, மீதமுள்ள மக்களுக்கு என்ன பிரச்னை என்கிற கேள்வியும் இங்கு வருகிறது.
தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லையா?, இந்த ஜனநாயக நாட்டின் மீது நம்பிக்கை இல்லையா? போன்ற கேள்விகளும் வருகின்றன.
வருமான வரி கட்டாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பது மட்டும் தேசத் துரோகம் கிடையாது. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் தேசத் துரோகம், ஜனநாயகத் துரோகம்தான்.
அதை என் சொந்தங்கள் செய்யக்கூடாது. கற்றவர்கள்தான் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நான் வாக்களித்தால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும். அதனால், என்னிலிருந்தும், உங்களிலிருந்தும்தான் மாற்றம் வரும். 
நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். அது நம் பொறுப்பும் கடமையும்" என்றவர், நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் பேருந்தின்றி அவதிப்பட்டது பற்றி, "அது நம் நாட்டில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடு. மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கிறது.
அங்கு நாம் பறப்பதற்கே விமானங்கள் இல்லை. ஆனால், 5000 ஏக்கரில் புதியதாக விமான நிலையம் கட்டப்போகிறேன் என்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வசதி குறைவாக இருந்தது என எவரும் வீதிக்கு வந்து நிற்கவில்லை.
ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இங்கிருந்து வெகு தூரம் செல்ல வேண்டும். இது கொடுமை. இது பேராசை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்களுக்கு ரொம்பவே தொந்தரவாகிவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0