'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

Jul 02, 2026 - 15:01
0
'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இரு விஜயபாஸ்கர்கள் தவெகவில் இணைந்து இருக்கின்றனர். எங்கள் தலைவர் பெயரில் உங்களின் பெயர்கள் ஆரம்பிக்கிறது. உங்களின் வாழ்க்கை அவரைப்போலவே பிரகாசமாக இருக்கும்.

இணைந்து பணி செய்வோம். 75 வருட பண அரசியலை, சாதி அரசியலைத் தூக்கி எறிந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சில எம்.எல்.ஏக்கள் இணையும்போது 90 சதவிகித அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று அவர்களிடம் சொன்னோம்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

அதேபோல தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இணைகிறார்கள். நேற்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலைவர்கள் சொன்ன விஷயம் 'நீங்கள் ஆட்சியமைக்க என்ன நிலைபாட்டை வேண்டுமானாலும் எடுப்பீர்கள் என்று நினைத்தோம்.

அதிமுக உடன் பேசுவீர்கள் என்று நினைத்தோம். அப்படியானால் நீங்கள் எளிதாக ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் ஆதரவு கேட்டது ஐந்து எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியை...பின், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆதரவு தருமா என்று அப்போது உங்களுக்கு தெரியாது.

ஆனால், நீங்கள் காங்கிரஸை அழைத்த போது, நாங்கள் உங்களை நம்பினோம். நீங்கள் மத சார்பின்மை கொள்கையிலும், சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக உள்ளீர்கள் என்பதை நம்பினோம்' என்றார்கள். தேர்தல் முடிவுகள் தெரிந்த உடனேயே திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

புரட்சி தலைவர் எதற்காக கட்சி உருவாக்கினார். தீயசக்தி திமுகவை ஒழிக்க உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. அதை வழிநடத்தியவர் புரட்சி தலைவர் அம்மா அவர்கள். தற்போது எடப்பாடியும் அவரது மகனும் தான் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

60 சதவிகித அதிமுக தவெகவில் இணைந்துவிட்டது. இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கிறது. கூடிய விரைவில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அறிவிக்கப்போகிறது. இது நடந்தால் அதிமுக வெறும் பேப்பரில் மட்டும்தான் இருக்கும்.

கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விட மாட்டோம். எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்.

இன்றும் எங்கள் அமைச்சர்கள் அவர்களது துறையில் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மாற்றம் நடந்திருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் செந்தில் பாலாஜி பணம் கொடுத்து விலைக்கு வாங்க பார்க்கிறார்" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User