"30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி; நாங்க நிலம் தரணுமா?" - சின்ன மண்டலவாடி மக்கள் அதிருப்தி
குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டிய அங்கன்வாடி மையமே கடந்த 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வரும் அவலநிலை.
திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டலவாடி ஊராட்சியின் சின்ன மண்டலவாடி கிராமத்தில் போதிய வசதிகள் இல்லாத வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் உணவுப் பொருட்கள், உணவுகளைச் சமைப்பது, விளையாட்டுப் பொருட்கள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர் என அனைத்திற்கும் வெறும் 10க்கு 10 அறை மட்டுமே உள்ளது.
இதனால் குழந்தைகள் சுதந்திரமாக அமர்ந்து கல்வி கற்க கூட வசதி இல்லை, மேலும் கழிவறை வசதி, சமையலறை வசதி என அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்து பெற்றோர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அச்சம் கொள்கின்றனர்.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனுக்கள் அளித்தும், நிரந்தர அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, "கிராம மக்கள் மூன்று சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கினால், புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டலாம்'' என்று அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பதில் கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "எங்களின் குறைகளை அரசிடம் எடுத்துச் சொல்வதுதான் எங்கள் பணி. அதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது அரசின் பொறுப்பு. அங்கன்வாடி கட்டிடம் கட்ட அரசு எங்களிடமே நிலம் கேட்பது எந்த வகையில் நியாயம்? குழந்தைகளுக்கான அடிப்படை வசதியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை அல்லவா?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "30 ஆண்டுகளாக ஒரு நிரந்தர அங்கன்வாடி கட்டிடம் கூட அமைக்க முடியாத நிலை வேதனை அளிக்கிறது.

இனியும் நிலம் தொடர்பான காரணங்களைக் கூறி திட்டத்தைத் தாமதப்படுத்தாமல், அரசு தானாகவே உரிய இடத்தைத் தேர்வு செய்து, அனைத்து அடிப்படை வசதிகளுடனும் புதிய அங்கன்வாடி மையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.
குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரம்பக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள் எந்தத் தடையும் இன்றி கிடைக்க வேண்டுமெனில், சின்ன மண்டலவாடி அங்கன்வாடி பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)