செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல் - மதுபான ஆலைகளிடம் Party fund? - DVAC வழக்கின் பின்னணி?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் நான்கு நபர்கள் மற்றும் சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்
இதனுடன், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும், மதுபான ஆலைகளிடம் party fund என்ற பெயரில் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது தனியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லம், அவரது உதவியாளர் சுப்பிரமணியின் இல்லம், கரூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாஸ்கரின் இல்லம், ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், கரூர் தொழில்பேட்டையில் செயல்படும் டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்
சென்னை ஆர். கே சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழு நேரில் விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் வழக்குகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள், Party fund என்ற பணம் பெறப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள மற்ற குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள், தங்களின் அறியப்பட்ட வருமானத்தை விட அதிக அளவில் சொத்துகளை குவித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக சில மதுபான ஆலை நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

சோதனையின்போது ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் விசாரணைக்கு தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)