''அதிகாலை 5 மணி வேணாம்!" தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் நேர மாற்றம் கோரிக்கை!
தாம்பரம் - தென்காசி ரயில் வழித்தடத்தில் இரு வழி மார்க்கமாக சிறப்பு ரயில்கள் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையில் 6 நாட்கள் இயக்கவிருப்பதாக தென்னக ரயில்வே துறையிலிருந்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஆனால் அந்த ரயில்கள் அதிகாலை 5 மணிக்கு கிளம்புவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையின் காரணமாக நேரத்தை மாற்ற கோரிக்கை வைக்கின்றனர் தென்மாவட்ட மக்கள்.
சென்னை - செங்கோட்டை ,
இரு வழி மார்க்க வழித்தடத்தில் 50 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும் பெரும்பாலும் காத்திருப்பு பட்டியலில்தான் இருக்க வேண்டும். கொல்லம் விரைவு ரயில் ஒன்று இந்த வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இருப்புப்பாதை காலத்திலிருந்து ஓடுகிறது. அதிலும் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருந்துதான் இடம் பிடிக்க முடியும். வாரத்திற்கு மூன்று நாள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஓடுகிறது அதிலும் இதே கதைதான். அகல ரயில் பாதை போட்ட பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டுமே நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாரம் முழுவதும் சென்னை - செங்கோட்டை இருவழி மார்க்கத்தில் 2 ரயில்கள் மட்டுமே நாள்தோறும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
பயணிகள் படும்பாடு
பெரும்பாலும் பல ரயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில் தீபாவளி, பொங்கல் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் அலைமோதும். ஆனால் செங்கோட்டை-சென்னை இரு வழி மார்க்க வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் எப்போதுமே கூட்டம் கடுமையாக அலைமோதும்.
இட நெருக்கடியால் சண்டைகளும் சச்சரவுகளும் பயணிகளுக்குள் இயல்பாகவே ஏற்படுவதை கண்கூடாக காணலாம். முன்பதிவு செய்து பல வாரங்களாக காத்துக் கிடந்து கடைசி நேரத்தில் ஆர்ஏசி சீட் கூட கிடைக்காமல் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு கட்டாயமாக பயணிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும் பயணிகளின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும். இதனாலேயே சென்னை - செங்கோட்டை இரு வழி மார்க்கத்திலும் முன்பதிவில்லா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கின்றது.

சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக தென் மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ரயில்கள் விடப்பட்டிருந்தாலும் அதை சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராசபாளையம்,சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி,செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்வது மிகுந்த சிரமமே. காரணம் விருதுநகர் ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் அருகருகே இல்லை. மேலும் விருதுநகரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நள்ளிரவில் பேருந்து போக்குவரத்து வசதியும் கிடையாது.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல..!
நெருக்கடியான இத்தகைய சூழ்நிலையில் பயணிகளின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக தாம்பரம் - செங்கோட்டை வழித்தடத்தில் இரு வழி மார்க்கமாக பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்த ரயில் இரு வழி மார்க்கமாக தாம்பரத்தில் இருந்தும், செங்கோட்டையில் இருந்தும் அதிகாலை 5 மணிக்கு கிளம்புவது தான் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம்,அதிகாலையில் சென்னையிலேயே தாம்பரம் செல்ல மின்சார ரயில்கள், பேருந்துகள் மிக மிக குறைவாகவே இயக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் காலையில் 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் கிளம்புவதால் இந்த ரயிலில் முன் பதிவு செய்தாலும் பலரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும்.

காலை ஐந்து மணிக்கு பதிலாக 6 மணிக்கு மேல் இந்த சிறப்பு ரயில்களை இயக்கினால் கூட நிறைய மக்கள் பயன்பெறுவார்கள். அதைவிடுத்து இப்படி செய்தால் ,சிறப்பு ரயில் விட்டோம் மக்களிடம் வரவேற்பு இல்லை அதனால் தாம்பரம் -தென்காசி பகல்நேர நிரந்தர ரயில் இயக்க முடியாது என்று சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. மக்களின் பயன்பாடு அறிந்து நேரத்தை மாற்றி இயக்குவது மிகவும் நல்லது. அதேபோல் செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்புவதும் மக்கள் பயன்பாட்டை குறைக்கும் செயலாகும். அங்கும் ஆறு மணிக்கு இயக்கினால் சரியாக இருக்கும் என்கின்றனர் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.
நிம்மதியான பயணக் கனவு நிறைவேறுமா?
இது பற்றி சென்னை கே கே. நகரில் வசிக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவர் கூறுகையில்" அதிகாலை 4 மணியிலிருந்துதான் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் எவ்வளவு வேகமாக சென்றாலும் கடைசி நேரத்தில் இந்த சிறப்பு ரயிலை தாம்பரத்தில் அதிகாலை 5 மணிக்கு தவற விடவும் வாய்ப்புகள் அதிகம். என்னைப் போன்று சென்னையில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் இதே நிலைமைதான்.
அதேபோல் தென்காசியில் இருந்தும் காலை 5 மணிக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் தென்காசியை சுற்றி உள்ள சிற்றூர்களைச் சேர்ந்தவர்களும் செங்கோட்டையைச் சேர்ந்தவர்களும் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்துவது கடினம். உதாரணமாக எனது உறவினர் ஒருவர் தென்காசி மாவட்டம் பண்பொழி கிராமத்தில் வசிக்கிறார். அவர் ஐந்து மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வர வேண்டும் என்றால் ஆட்டோவுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டி இருக்கும்.
இந்த ரயில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சிட்டிங் டிக்கெட் குறைந்த தொகையாக 245 ரூபாய் முன்பதிவு கட்டணமாக பெறப்படுகிறது. ஆனாலும் இத்தகைய ஏழை மக்கள் தென்காசி ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5 மணிக்குள் வர வாடகை வாகனங்களுக்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே இந்த சிறப்பு ரயிலை இரு வழி மார்க்கமாகவும் காலை 6 மணிக்கு இயக்கினால் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
என்ன சொல்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்...?
இது பற்றி ரயில் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது " இந்த சிறப்பு ரயில் உபரியாக இருக்கும் எஞ்சின் மற்றும் பெட்டிகளை கொண்டு சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. எனவே ரயில்வே துறைக்கு தோதாக இருக்கும் நேரத்தில் மட்டுமே இயக்க முடியும். இது நிரந்தர ரயிலாக மாற்றப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் அவர்கள் கேட்கும் நேரத்தில் ரயில் இயக்க வாய்ப்புகள் அதிகம்" என்று கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)