வூஹான் ஆய்வகத்துக்கு அமெரிக்க நிதி; பொய் சொல்லிய ஃபௌசி? - ஆதாரங்களுடன் அதிரவைத்த துளசி கபார்ட்!

Jun 19, 2026 - 16:01
0
வூஹான் ஆய்வகத்துக்கு அமெரிக்க நிதி; பொய் சொல்லிய ஃபௌசி? - ஆதாரங்களுடன் அதிரவைத்த துளசி கபார்ட்!

உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்றின் பிறப்பிடம் எது?

இந்தக் கேள்விக்கான விடை இன்னும் மர்மமாகவே நீடிக்கும் நிலையில், அமெரிக்காவின் அரசியல் மற்றும் விஞ்ஞான வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது ஒரு புதிய தகவல்.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (DNI) இயக்குநராக இருந்து பதவி விலகும் துளசி கபார்ட், தனது பதவியின் கடைசி நாளில் வெளியிட்டுள்ள ஆவணங்கள், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருந்த டாக்டர் அந்தோனி ஃபௌசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

வுகான்

கோவிட் பெருந்தொற்று பரவக் காரணமாக இருக்கலாம் என பரவலாக சந்தேகிக்கப்படும் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்திற்கு, டாக்டர் ஃபௌசி அமெரிக்க மக்களின் வரிப்பணத்திலிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை நிதியாக வழங்கியுள்ளார் என்பதுதான் துளசி கபார்ட்டின் பிரதான குற்றச்சாட்டு.

`இதற்கு முன் யாரும் பார்த்திராத' என அவர் குறிப்பிட்டுள்ள இந்த ஆவணங்களின்படி, வௌவால்களின் கொரோனா வைரஸ்கள் மீது 'கெயின்-ஆஃப்-ஃபங்ஷன்' எனப்படும் அபாயகரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

இதுகுறித்து துளசி கபார்ட்டின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற உண்மையை மூடிமறைக்க, ஃபௌசி அரசியல்மயமாக்கப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணத்தின் கீழ் சாட்சியமளித்தபோது, வைரஸ் ஆராய்ச்சி குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் விவாதித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி ஃபௌசி பொய் சொல்லியிருக்கிறார். அந்தப் பொய்யை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

ஃபௌசியின் தந்திரோபாயங்கள், 'ஆழமான அரசின் சூழ்ச்சிப் புத்தகத்திலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை' (straight from the deep state playbook) என துளசி கபார்ட் கடுமையாகச் சாடியுள்ளார். "டாக்டர் ஃபௌசி போன்ற தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ளும் தலைவர்கள், தங்களின் தவறுகளையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் மூடிமறைத்துள்ளனர். புலனாய்வுத் தகவல்களைத் திரித்துள்ளனர், நாடாளுமன்றத்தில் பொய் சொல்லியுள்ளனர், மேலும் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான முக்கிய உண்மைகளை அணுகுவதைத் தடுத்து, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு வைத்துள்ளனர்," என்றும் அவர் கூறியுள்ளார்.

பெருந்தொற்று காலம் முழுவதும், ஃபௌசி ஒரு தந்திரமான சுய-சேவை சுழற்சி அறிக்கையிடல் முறையை உருவாக்கியதாக கபார்ட்டின் அறிக்கை விவரிக்கிறது. அதாவது, தனது நிறுவனமான NIAID-ஆல் நிதியளிக்கப்பட்ட விஞ்ஞானிகளையே புலனாய்வு அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கும்படி அவர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த உள்ளீடுகள்தான் அதிகாரப்பூர்வ புலனாய்வு மதிப்பீடுகளை வடிவமைத்தன.

பின்னர், ஆய்வகக் கசிவு கோட்பாட்டை மறுப்பதற்காக, இந்த மதிப்பீடுகளே 'விஞ்ஞான ஒருமித்த கருத்து' என்று பொதுவில் மேற்கோள் காட்டப்பட்டன. இந்த தந்திரமான செயல்பாடு, உண்மையை திட்டமிட்டு புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஃபௌசியின் முடிவுகளை எதிர்த்த அல்லது கேள்வி கேட்ட புலனாய்வு ஆய்வாளர்கள், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளானதாகவும், ஓரங்கட்டப்பட்டதாகவும், அவர்களின் தொழில் வாழ்க்கையில் பின்னடைவுகளைச் சந்தித்ததாகவும் சாட்சியங்கள் வெளிப்படுத்துகின்றன. "இது மாற்றுக் கருத்துக்களை நசுக்கியதுடன், நம்பகமான ஆதாரங்கள் புதைக்கப்பட்டு, உண்மைக்கு பதிலாக இணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்த்தது," என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்து, உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணவைத்த ஒரு பெருந்தொற்றின் மூலப்புள்ளி குறித்த இந்த புதிய தகவல்கள், ஏற்கெனவே நிலவிவரும் சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன. துளசி கபார்ட்டின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு டாக்டர் ஃபௌசி தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இருப்பினும், அமெரிக்க அரசியலில் இது ஒரு பெரும் விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User