'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

Apr 23, 2026 - 13:31
 0
'நேற்று இரவு கிளம்பிய பஸ் இன்று மாலை 6 மணிக்குத்தான்.!' - EC மீதான அண்ணாமலையின் 'தனிப்பட்ட' கருத்து

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையத்தில் வாக்களித்தார்.

அதன் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்குச் செல்ல பேருந்து வசதி மிக குறைவாக இருக்கிறது என்று போன் மற்றும் மெசேஜ்கள் வந்தன.

தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என இரண்டும் குறைவாக இருந்தது.

அதனால், தேர்தல் ஆணையம் இன்னும் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாமோ என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அண்ணாமலை
அண்ணாமலை

போக்குவரத்துத் துறையைக் கையிலெடுத்து, தேவையான வழிமுறைகளைக் கொடுத்திருக்க வேண்டும். போதுமான பேருந்து வசதி இருக்கிறதா என்பதை பார்த்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, நேற்று இரவு சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்து, இன்று மாலை 6 - 6.30 மணிக்குத்தான் ராமநாதபுரத்திற்குச் செல்லவிருக்கிறது. அந்தளவிற்கு தாமதமாகிறது.

கட்சியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து புகார் செய்கின்றனர்.

இந்த முறை தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

வீடு வீடாக 5 பேர் சென்று ஒரு வாக்கிற்கு ரூ.5,000 தருகிறார்கள். கரூர் சட்டமன்றத் தொகுதியில் அரை கிராம் தங்கக் காசை தைரியமாக கொடுக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு நாளில் வந்துவிடவில்லை. மைக்ரோ மேனேஜ் செய்து, பதுக்கி தான் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள்.

சாதாரண மக்கள் ரூ.50,000 கொண்டு சென்றால், எவ்வளவு நடைமுறைக்கு ஆளாகிறார்கள்.

எஸ்.ஐ.ஆர் பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் நேர்மையாக, நாணயமாக, நடுநிலையாக தமிழ்நாட்டில் செயல்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர்களுக்கு முன்பு, குறிப்பாக திமுக பல இடங்களில் சாஃப்ட் கேம்பைனிங் செய்கிறது. இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0