பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்த விலை! - விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி!

May 23, 2026 - 08:32
0
பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்த விலை! - விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி!

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். தற்போதைய புதிய மாற்றத்தின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் உயர்வால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் பங்குகள்
பெட்ரோல் பங்குகள்

முன்னதாக, கடந்த மே 15-ம் தேதி முதன்முதலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மே 19-ம் தேதி மீண்டும் லிட்டருக்கு 90 காசுகள் வீதம் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது மே மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மூன்றாவது விலை உயர்வு பொதுமக்களின் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்தச் சமீபத்திய விலை மாற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகரான டெல்லியில் பெட்ரோல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.99.51 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.92.49 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், நேற்று மேலும் 6 காசுகள் குறைந்தது. அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.104.51-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.96.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.105.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் உயர்வு, அனைத்துத் துறைகளிலும் போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வால் நுகர்வோர் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த எரிபொருள் விலை உயர்வு பணவீக்க அழுத்தத்தையும், நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகளையும் மேலும் அதிகரிக்கும் என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User