Doctor Vikatan: காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்தால், மதியம் எடுக்கலாமா?

Mar 28, 2026 - 08:32
 0
Doctor Vikatan: காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்தால், மதியம் எடுக்கலாமா?

Doctor Vikatan: காலை டிபன் சாப்பிட்ட பிறகு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளில் சில நேரம் போடுவதற்கு மறந்துவிடுகிறேன். இந்த மாத்திரையை பகல் உணவுக்குப் பிறகு போடலாமா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

நீங்கள் எதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்ற விவரம் இல்லை. அது இருந்தால் மட்டும்தான், உங்கள் கேள்விக்கான சரியான பதிலைச் சொல்ல முடியும். ஒவ்வொரு மருந்தும் எத்தனை மணி நேரம் வேலை செய்யும், அடுத்த வேளைக்கு எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்தும் இது மருத்துவரால் முடிவு செய்யப்படும்.

ஒவ்வொரு மருந்தும் அதன் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ளப்பட வேண்டும்.  உதாரணத்துக்கு, சத்து மாத்திரைகள்...  இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை. அதுவே, வலி நிவாரணிகள் (Painkillers) வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றை  எப்போதும் சாப்பிட்ட பிறகு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அசிடிட்டி மாத்திரைகள்,  அமிலத்தன்மையைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படுபவை.  இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன்னரே எடுத்துக்கொள்வது தான் பலன் தரும்.

எனவே,  ஒரு நோயாளிக்கு எந்தக் காரணத்திற்காக, எந்த அளவில் மருந்து வழங்கப்பட்டது என்பது அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்.  எனவே, மருத்துவர் பரிந்துரைத்த கால அட்டவணையின்படி மருந்துகளைத் தொடர்வதே சரியானது. 

முறையான மருத்துவ ஆலோசனை இன்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டும் வைத்து மருந்துகளை உட்கொள்வது தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கலாம்.  

வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெட்டிகள் கொண்ட 'பில் ஆர்கனைசர்' (pill organiser) பயன்படுத்துவது, நீங்கள் மருந்து சாப்பிட்டீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த உதவும்.

வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெட்டிகள் கொண்ட 'பில் ஆர்கனைசர்' (pill organiser) பயன்படுத்துவது, நீங்கள் மருந்து சாப்பிட்டீர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த உதவும்.    உங்கள் மொபைல் போனில் ஒவ்வொரு வேளை மருந்துக்கும் தனித்தனியாக அலாரம் வைத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொள்வதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மொபைல் ஆப்ஸையும் (Apps) பயன்படுத்தலாம்.  பல் துலக்குவது, காலை உணவை உண்பது அல்லது தூங்கச் செல்வது போன்ற உங்கள் தினசரி வழக்கமான செயல்களுடன் மருந்துகள் எடுப்பதையும் இணைத்துக் கொள்ளுங்கள். 

மருந்துகளை அலமாரிக்குள் வைக்காமல், உங்கள் கண்களில் அடிக்கடி படும் இடங்களான டைனிங் டேபிள் அல்லது படுக்கைக்கு அருகில் உள்ள மேஜை மீது பாதுகாப்பாக வைக்கலாம். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டியது முக்கியம்.   ஒரு காகிதத்தில் தேதிகள் மற்றும் நேரங்களைக் குறிப்பிட்டு, மருந்து சாப்பிட்டவுடன் அதில் ஒரு டிக் (Tick) போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.   இவை எல்லாம் மருந்துகளை மறக்காமல் சாப்பிட உங்களுக்கு உதவும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0