`தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள்'- எவிடென்ஸ் அமைப்பு அதிர்ச்சி தகவல்!

Jul 05, 2026 - 15:01
0
`தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள்'-  எவிடென்ஸ் அமைப்பு அதிர்ச்சி தகவல்!

எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 20 வயது தலித் இளைஞர் பார்த்திபன் மற்றும் 16 வயது சிறுமி கடந்த ஜூன் 30-ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு முன்பாக, சிறுமியின் உறவினர்கள் பார்த்திபனை சாதி ரீதியாக தாக்கியதுடன், அவரது தாயாரையும் மிரட்டியதாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே தாக்குதல் தொடர்பாக தகவல் இருந்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், நள்ளிரவில் பார்த்திபனின் தந்தை மாரிமுத்துவை அழைத்துச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டுமாறு கூறியுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கை தற்கொலை வழக்காக மட்டும் கருதாமல், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

தற்கொலை
தற்கொலை

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரத்தில் 17 வயது தலித் இளைஞரை காதலித்த 18 வயது இளம்பெண் கடந்த ஜூன் 15-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பிறகு, அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமலும், உடற்கூறாய்வு நடத்தாமலும் உடலை அவசரமாக தகனம் செய்துள்ளனர். இது சட்டத்தை மீறும் செயலாகும். உயிரிழப்பதற்கு முன்பு தனது பெற்றோர் தன்னை மிரட்டுவதாகவும், தற்கொலை செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும் அந்த இளம்பெண் தனது காதலனிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த வழக்கில் சட்டவிரோதமாக சடலத்தை தகனம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்து, இந்த வழக்கையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் சாதியின் பெயரில் நடைபெறும் ஆணவக் கொலைகளைத் தடுக்க நீதியரசர் கே.என். பாஷா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஆணவக் கொலை

பதின்பருவ காதல் தொடர்பான பிரச்னைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வட்டார அளவில் ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் மையங்களை உருவாக்க வேண்டும்.

மயிலாடுதுறை மற்றும் ஊரணிபுரம் ஆகிய இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்க, வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உண்மையை வெளிக்கொணர வேண்டும். தமிழகத்தில் 75 நாள்களில் 8 ஆணவ மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User