'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' - கொந்தளிக்கும் ஆதவ்!

Apr 1, 2026 - 14:31
 0
'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' - கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றனர்.

Aadhav
Aadhav

புகாரை கொடுத்துவிட்டு ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'எங்களுடைய கோரிக்கைகளை அமைதியாக கேட்டுக் கொண்டனர்.

பெரம்பூரில் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் காவல்துறையினர் முறையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தனர்.

பெரம்பூரை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்றார். அங்கே RO அனுமதி கொடுத்த இடத்துக்கு செல்வதற்குள் அளவுக்கதிகமான பேருந்துகளை அந்த இடத்துக்குள் விட்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் வர சொல்லி நாங்கள் சொல்லவில்லை. தலைவரின் பிரசாரத்துக்காக நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக தலைவரை பார்க்க வந்தனர். ஆனால், களத்தில் எந்த போலீஸூம் இல்லை. காலையில் ஸ்டாலின் அதே கொளத்தூரில் ரோடு ஷோ செய்தார். அதற்கு 2000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மக்களே இல்லாத கூட்டத்துக்கு எதற்கு அத்தனை போலீஸ்?

Aadhav
Aadhav

நாளை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை நோக்கி தலைவர் பிரசாரம் செல்லவிருக்கிறார். ஆனால், தலைவர் வேன் மீது ஏறி நின்று மக்களை பார்க்கக்கூடாது என்கின்றனர். எனில், அவர் பேசும் இடத்தில்தான் அத்தனை கூட்டமும் கூடும். இதைத்தான் நாங்கள் கரூர் விவகாரத்திலும் சிபிஐயிடம் கூறினோம்.

காவல் அதிகாரிகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

Aadhav
Aadhav

கொளத்தூரில் கரூரில் பார்த்ததைப் போல மக்கள் மத்தியில் அலை உருவாவதை பார்த்தோம். அதனால்தான் உடனடியாக பிரசாரத்தை ரத்து செய்தோம். கொளத்தூரில் எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அதை வைத்து ஸ்டாலின் எங்களின் தலைவரை முடக்க திட்டமிட்டிருந்தார்.

நாளை வேட்புமனுவை முடித்துவிட்டு தலைவர் தமிழகம் முழுவதும் வீதி வீதியாக செல்லவிருக்கிறார். அந்த பிரசாரத்துக்கு தலைவருக்கும் மக்களுக்கும் முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும். தலைவர் பிரசாரம் செய்யும் இடங்களை Free Zone ஆக அறிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஜெயலலிதா மட்டும்தான் திமுகவுக்கு எதிரி.இப்போதைய அதிமுகவை திமுக எதிரியாக பார்க்கவில்லை. அதனால்தான் எங்களின் பிரசாரத்தில் புகுந்து ரவுடியிசம் செய்கிறார்கள்.

நேற்று வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்துக்கு வந்த பெண்கள் மீது பாட்டில் எறிந்தது குடிகாரர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அது திட்டமிட்ட தாக்குதல். அங்கே இன்னும் நிறைய பாட்டில்கள் இருந்தது. நாங்கள் சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றிவிட்டோம். அதையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறோம்.' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0