`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுணனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அ.தி.மு.க-வினர் ஆயிரம் ரூபாயும் பணப்பட்டுவாடா செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க-வினருக்கு எதிராக, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் தி.மு.க, அ.தி.மு.க-வினர் இடையே அடிதடி நடந்த நிலையில், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனிடையே பணப்பட்டுவாடா புகார் காரணமாக கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் மற்றும் கோவை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் வேல்முருகன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதற்கு கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, “சட்டமன்ற பொது தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமில்லாத செய்திகளை வதந்திகளாக பரப்பி வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0