விழுப்புரம்: குப்பைக் கிடங்காக மாறிய திண்டிவனம் மேம்பாலம்! - கண்டுகொள்ளாத நகராட்சி; தீர்வு?

Jul 16, 2026 - 16:31
0
விழுப்புரம்: குப்பைக் கிடங்காக மாறிய திண்டிவனம் மேம்பாலம்! - கண்டுகொள்ளாத நகராட்சி; தீர்வு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம் அது.

பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்துதான் அந்த மேம்பாலத்தை அடைய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அந்தப் பாதையைத்தான் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.

திண்டிவனம் மேம்பாலம்

ஆனால் அந்தப் பாதை தற்போது குப்பைக் கிடங்காக மாறி, சுகாதாரமற்றுக் கிடக்கிறது. அதனால் அப்பகுதி முழுவதும் வீசும் கடுமையான துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர் மக்கள். மேம்பாலத்தின் கீழ் பழங்கள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளும் தினந்தோறும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பொதுமக்கள் அங்கு பழங்கள் மற்றும் பூக்களை வாங்கி செல்கின்றனர். ஆனால், கடைகளின் அருகிலேயே குப்பைகள் தேங்கி கிடப்பதால் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்தும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் கொசு, ஈ போன்ற பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் கழிவுகளுடன் மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் மேலும் அதிகரிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

இதுகுறித்து நகராட்சியில் புகாரளித்தாலும், யாரும் கண்டுகொள்வதில்லை என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கம். இந்த பிரச்னையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User