பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

Jul 16, 2026 - 16:31
0
பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை.16) நடைபெற்றது.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"இன்று நடைபெற்றது பட்ஜெட் சம்பந்தப்பட்ட வழக்கமான கூட்டம். எப்படி பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது குறித்தெல்லாம் பேசினோம்" என்றிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தொடர்ந்து விசாரணை கைதி சபரிவர்மன் மரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கடந்த திமுக ஆட்சியில் சிறையில் நடைபெற்ற மரணங்கள் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் தவெக அரசில் வெளிப்படையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவறு நடந்ததாக தெரிய வந்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் முந்தைய அரசில் நிகழ்ந்த சிறை மரணங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் புழல் சிறையில் கூட ஒரு கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றிருக்கிறார்.

தொடர்ந்து பழனி கோயில் நிலமோசடி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கம் அளித்த நிர்மல் குமார், "திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்திருந்தது. இரவு 9 மணி வரையெல்லாம் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது.

தவெக ஆட்சியில் இந்த துறை முழுவதுமாக சீரமைக்கப்படும். திமுகவில் அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார். அதனை வசூலிக்க ஒவ்வொரு அலுவலகத்திற்கு 2 பேர் இருந்தனர். ஏற்கனவே போலி பத்திரப்பதிவு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி
முன்னாள் அமைச்சர் மூர்த்தி

தவெக ஆட்சியில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் பழனி கோயில் நில விவகாரத்தில் தவெகவினரைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பில்லை. தவறு எங்கு நடந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவித்திருக்கிறார்.

தவிர திமுக, அதிமுக குறித்து பேசிய அவர், "திமுகவும், அதிமுகவும், பாஜகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக திமுகவும், அதிமுகவும் அவர்களது கட்சியை நடத்த முடியாமல் பாஜகவுடன் இணைத்துக்கொண்டு ஸ்டாலின் குடும்பத்தில் இரண்டு கேபினட் அமைச்சர்களும், எடப்பாடி அவர்களின் குடும்பத்தில் இரண்டு கேபினட் அமைச்சர்களும் வாங்கிக்கொண்டு செல்லும் அளவிற்கு இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

அவர்களுக்கு கட்சியை நடத்தும் எண்ணமும் இல்லை. காப்பாற்றும் எண்ணமும் இல்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா உருவாக்கிய கட்சியை எடப்பாடி என்ன செய்துகொண்டிருக்கிறார்.

இப்போதைக்கு இருவருக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் பணி சென்றுகொண்டிருக்கிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User