VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா!

Apr 1, 2026 - 13:02
 0
VCK: உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்த ஷாநவாஸ்... விளக்கமளித்த திருமா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மூவரும் அப்செட் ஆகியிருக்கிறார்கள். மேலும் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்தையும் புறக்கணித்திருக்கிறார்கள். இச்சூழலில் அவர்களுக்கு ஏன் சீட் வழங்கவில்லை என விளக்கமளித்திருக்கிறார் திருமா.

திருமாவளவன்
திருமாவளவன்

2026 சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி, பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உட்கட்சி மட்டுமின்றி பொதுச் சமூகத்திலும் அந்த எதிர்ப்பார்ப்பு இருந்தன.

ஆனால், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனச் சொல்லி திருப்போரூர் பன்னீர்தாஸ், பண்ருட்டியில் அப்துல் ரகுமான், அரக்கோணத்தில் எழில் கரோலின், கள்ளக்குறிச்சியில் மாலதி ஆகியோரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். காட்டுமன்னார்கோவிலில் திருமாவும், செய்யூரில் சிந்தனைச் செல்வனும், திண்டிவனத்தில் வன்னி அரசும் போட்டியிடுகின்றனர்.

நம்மிடம் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகிகள், "ஆளூர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கவில்லை, எஸ்.எஸ் பாலாஜியும், பனையூர் பாபு சிறப்பாகத்தானே செயல்பட்டனர் என்ற கேள்வி வி.சி.க-வினர் மத்தியில் அழுத்தமாக இருக்கிறது. அந்த மூவர் மத்தியிலும் பெரும் வருத்தம் இருக்கின்றன.

ஆகையால் அவர்கள் மார்ச் 31-ம் தேதி இரவு நடந்த கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டார்கள். அவர்கள் மூவரையும் தலைவர் தொடர்புகொள்ள முயன்ற சூழலிலும் அவர்கள் பேச முன்வரவில்லை. துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலும் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

ஷாநவாஸ்

தொடர்ந்து பேசியவர்கள், "இச்சூழலில், எம்.எல்.ஏ-க்களை அழைத்துப்பேசி ஆசுவாசப்படுத்த முயன்றார் திருமாவளவன், ஆனால் மூவருமே அதற்கு தயாராக இல்லை. ஆகவே முகநூல் நேரலையில் 'சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் மூவரின் செயல்பாடுகள் மீது எனக்கு விமர்சனமும் இல்லை. எஸ்.எஸ் பாலாஜியை நான் சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறேன், அவரது சட்டமன்ற செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக அமைச்சர்களே சொன்னார்கள். பனையூர் பாபுவும் அப்படித்தான்.

குறிப்பாக ஷாநவாஸ் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. நாகைப்பட்டிணம் தொகுதி நமக்கு கிடைத்திருந்தால் அவருக்கு நிச்சயம் சீட் கொடுத்திருப்பேன், ராயபுரத்தில் போட்டியிட விரும்புகிறார் என்றதும் சரி, அவருக்கு ராயபுரத்தில் நிறுத்திவிடலாம் என எண்ணிணேன். பிறகு பல்லாவரம் தொகுதியை கேட்டபோது தே.மு.தி.க-வுக்கு தருவதாக சொல்லிவிட்டார்கள். இறுதியில் பொதுத் தொகுதியாக திருப்போரூம், பண்ருட்டியும்தான் கிடைத்தது.

நீண்ட நாள் கட்சியின் பயணிக்கிற அப்துல் ரகுமானும் சீட் கேட்டதால், ஷாநவாஸிடம் பேசிக் கொள்ளலாம் என அப்துல் ரகுமானுக்கு சீட் கொடுத்தேன். மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கும் வருத்தம் இருந்தால் என்னிடம் வந்து முறையிடலாம். கட்சிப் பணிகளை தொடரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார்" என்றனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0