தூத்துக்குடி: 10 சவரன் தங்க நகைக்காக பெரியம்மாவைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; சிக்கியது எப்படி?

Jul 14, 2026 - 14:32
0
தூத்துக்குடி: 10 சவரன் தங்க நகைக்காக பெரியம்மாவைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலாபுரத்தைச் சேர்ந்தவர் திருக்கண்ணன் என்பவரின் மனைவி கலாவதி. இவர், சத்துனவு திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரு மகன்கள்.

ஒருவருக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி அதிகாலையில் திருக்கண்ணன் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த கலாவதி கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

MURDER
MURDER

மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காடல்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைக் கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் சந்தேகத்தின் பேரில் 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனாலும், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த திருமேனிமுருகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இவருக்கு கொலை செய்யப்பட்ட கலாவதி, பெரியம்மா உறவுமுறை எனத் தெரியவந்தது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 5-ம் தேதி பெரியம்மா கலாவதி வீட்டிற்குப் பசியோடு சென்றபோது தனக்கு தோசை சுட்டுக் கொடுத்ததாகவும், நான் ஏன் பெரியம்மாவைக் கொலை செய்யப்போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கலாவதியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ”எனக்கு கடன் பிரச்னை இருந்தது. கடனைக் கொடுக்க என்ன செய்வதென யோசித்தபோது பெரியம்மா கழுத்தில் அணிந்திருந்த நகைகளைத் திருடிவிடலாம் என யோசித்தேன். ஆனால், நகைகளைத் திருடும் போது அவர் முழித்துவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த அவரது வாயை துணியால் பொத்தி உளியால் கழுத்தில் குத்தினேன். துடிதுடித்த பெரியம்மா சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.

காடல்குடி காவல்நிலையம்
காடல்குடி காவல்நிலையம்

பின்னர் 10 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்றேன். நகைகளையும், கொலைக்குப் பயன்படுத்திய உளியையும் அங்கு புதைத்து வைத்தேன். பெரியம்மா கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் பரவியதும் நானே போலீஸுக்கு தகவல் கூறினேன்” எனக்கூறி போலீஸாரையே அதிர வைத்தார்.

இதனையடுத்து திருமேனி முருகனை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.     

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User