'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

May 12, 2026 - 18:32
0
'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் (மே.10) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், "கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேச நலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளைத் தொடருவது காலத்தின் கட்டாயமாகும். பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருப்பதாக ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், " தற்போதைய பொருளாதார நிலை குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும். மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது. வதந்திகள் மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது.

 கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்தக்கூடாது. அரசு தனது சொந்த செலவுகளைக் குறைத்துக்கொண்டு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதைத் தான் மோடியின் பேச்சு எடுத்துக்காட்டுகிறது" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User