பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

Jul 29, 2026 - 15:01
0
பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்தனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற இரண்டு கட்ட இணைப்பு நிகழ்ச்சிகளில், மொத்தம் 8 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்.பி., பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 7 தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இணைந்தனர்.

முதல் கட்டமாக, முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி, முன்னாள் எம்.பி. இளவரசன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜ், ராஜமுத்து, ராஜவர்மன், பன்னீர்செல்வம், முருகன், என். சிவா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். பின்னர் இரண்டாம் கட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்டோரும் கட்சியில் இணைந்தனர்.

பனையூர் | தவெக அலுவலகம்

இவர்களில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சித் தலைமை உறுதியளித்துள்ளதாக கூறப்படுவதால், அந்தத் தரப்பில் பெரிதாக அதிருப்தி இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் நிலை வேறுபட்டதாக இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும், மாவட்டம், மண்டலம் அல்லது மாநில அளவிலான எந்தவொரு பொறுப்பும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், முக்கிய நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாகச் சந்திப்புகளிலும் அவர்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, அதிமுகவில் பல ஆண்டுகள் அமைச்சர்களாகவும், மாவட்ட அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போது சாதாரண உறுப்பினர்களைப் போலவே நடத்தப்படுவதாகவும், கட்சியில் இணைந்த பிறகும் தங்களது அரசியல் அனுபவத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், தவெகவில் இணையும் முன்பு எதிர்கால அரசியல் வாய்ப்புகள், கட்சிப் பொறுப்புகள் மற்றும் அமைப்பில் முக்கிய இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் இருந்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவித தெளிவான அரசியல் உறுதியும் கிடைக்காததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காத்திருக்கும் மனநிலையில் அவர்கள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்

இதற்கிடையில், கட்சி அமைப்பை விரிவுபடுத்தும் பணிகளில் தவெக தலைமை தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிதாக இணைந்துள்ள மூத்த தலைவர்களுக்கு விரைவில் பொறுப்புகள் வழங்கப்படுமா, அல்லது அவர்களிடையே நிலவும் அதிருப்தி மேலும் அதிகரிக்குமா என்பது உன்னிப்பாக கவனிக்கப்படும் அம்சமாக மாறியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User