செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

Jul 29, 2026 - 19:31
0
செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், சென்னை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் டிவிஏசி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

FIR-ல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

அதன்படி, `தமிழகம் முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வரும் நிலையில், 2021-ஆம் ஆண்டு முதல் சில மாவட்டங்களில் பார்களின் வருவாய் திடீரென குறைந்ததாகவும், அதன் பின்னணியில் முறைகேடுகள் நடந்திருக்கலாம்' என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட 284 பார்கள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டதாகவும், பார் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு ரூ.17.27 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் FIR-ல் கூறப்பட்டுள்ளது.

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பார் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களும் தொடர்ந்து இயங்கி அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதோடு, தனியார் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், பழைய மதுபான பாட்டில்கள் கொள்முதல், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

fir

அமலாக்கத்துறை ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை

அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை டிவிஏசி பதிவு செய்து, தற்போது சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், பாட்டில் விநியோகம் மற்றும் மதுபான பிராண்ட் ஒப்புதல்கள் உள்ளிட்ட செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பின்னணி கொண்ட நபர்கள் இணைந்து கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக FIR-ல் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சேகரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User