குமரி: யானை மனித எதிர்கொள்ளலை தவிர்க்க மரங்களில் ஏறுமாடம்; பாரம்பர்யத்துக்கு திரும்பும் பழங்குடிகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டிய செட்டில்மென்ட் பகுதிகளில் நூற்றாண்டுகளைக் கடந்து பழங்குடி காணி இன மக்கள் வசித்து வருகின்றனர். திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் 48 செட்டில்மென்ட் பகுதிகள் என அழைக்கப்படும் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் பழங்குடி மக்கள் வீடுகள் அமைத்து விவசாயம் செய்து வாழ்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கல்வியிலும், கலாசாரத்திலும் வளர்ச்சி பெற்ற பழங்குடி மக்கள் தற்போதும் பெரும்பாலும் மலையோர செட்டில்மென்ட் பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர்.
வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசித்து வந்த மக்களின் விவசாய நிலங்களில் வன விலங்குகள் தொல்லை சாதாரணமாகவே இருக்கும். இவ்வாறு வரும் விலங்குகளை கண்காணித்து விரட்ட, விவசாய பகுதிகளில் மரங்களின் மீது பரண் போன்ற அமைப்புடன் 'ஏறுமாடம்' அமைத்து கண்காணிப்பது வழக்கம். மரங்கள் மற்றும் உயரமான பாறைகளின் மேற்பகுதியில் கம்புகள் பயன்படுத்தி மாடம் அமைப்பதுதான் ஏறுமாடம். விவசாய பயிர்களின் மாற்றம் உள்ளிட்ட கால மாற்றத்தால் ஏறு மாடத்தின் பயன்பாடு குறைந்து வந்தது. இதனால் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில ஏறு மாடங்களை மட்டுமே தற்போது காணமுடியும். அவையும் பராமரிப்பு இல்லாமல் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில் பழங்குடியின கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களைத் தாண்டி குடியிருப்பு பகுதிகளிலும் வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கடையால் அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் காட்டு யானை எதிர்கொள்ளலால் ராஜேஷ் என்பவர் மரணமடைந்தார். மேலும், தொடர்ச்சியாக யானை மனிதர்கள் எதிர்கொள்ளல் நடந்துவருகிறது. இதையடுத்து யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்காக மீண்டும் ஏறுமாடம் அமைக்க பழங்குடியின மக்கள் முடிவுசெய்துள்ளனர். தோட்டமலை பகுதியைச் சேர்ந்த வினு என்பவரது வீட்டின் அருகே சுமார் 20 பேர் வசிக்கும் வகையில் ஏறுமாடம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வினு கூறுகையில், "முன் காலங்களில் எங்கள் மூதாதையர்கள் விவசாய நிலங்களில் ஏறுமாடம் கட்டி பயன்படுத்தி வந்தனர். எனது அப்பாவும் ஏறுமாடத்தைப் பயன்படுத்தி வந்தார். இதன் மூலம் ஒரே இடத்தில் இருந்து தூரத்தில் உள்ள பகுதியைக் கண்காணிக்க முடியும், விலங்குகள் வருவதை தூரத்தில் இருந்து பார்க்கவும் வசதியாக இருக்கும்.
ஆனால் நாங்கள் இப்போது கட்டியிருக்கும் ஏறுமாடம், யானைகளுக்கு பயந்து பாதுகாப்பிற்காக கட்டப்பட்டதாகும்.
எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் யானை பக்கத்தில் வந்த பின்பு தான் தெரிகிறது. குழந்தைகள், பெண்கள் மிகவும் பயத்துடன் வசித்து வருகின்றனர். பாதுகாப்பு இல்லாத வீடுகளில் யானைகள் சேதத்தை உருவாகிறது, அதனால் ஏறுமாடம் கட்டியுள்ளோம். இரண்டு வாரங்களுக்கு முன் மாலை நேரத்தில் காட்டு யானைகள் வந்தது. மிக அருகில் வந்த பின்பு தான் யானையை பார்த்தோம். நாங்கள் ஒன்று சேர்ந்து விரட்ட முயற்சித்த போது யானைகள் எங்களை துரத்தியது. அப்போது பாறை மேல் ஏறி தப்பித்தோம். அப்போது தான் பெரிய அளவிலான ஏறுமாடம் அமைப்பது குறித்து ஆலோசித்தோம்.

எங்கள் வீட்டுக்கு அருகேயுள்ள புளிய மரத்தில் புதிய ஏறுமாடம் கட்டியுள்ளோம். நான்கு, ஐந்து பேர் இரண்டு வாரம் பணிசெய்து ஏறுமாடம் தயார் செய்தோம். இரவு நேரத்தில் 20 பேர் பாதுகாப்பாக அதில் ஓய்வெடுக்கலாம். ஆனால் மேற்கூரைக்கு தற்போது தார்ப்பாய்தான் பயன்படுத்தி உள்ளோம். எங்கள் பகுதியிலுள்ள நான்கு வீட்டாருக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. மழை நாள்களில் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு யானை வருவது தெரியாது. யானை அருகில் வந்த பின் பாதுகாப்பான இடத்துக்குச் செல்வது சிரமம். ஆகவே மழை நாள்களில் இரவு நேரங்களில் அனைவரும் ஏறுமாடத்தில் வசிக்கிறோம்.
தொடர்ச்சியாக யானைகள் வந்து செல்கின்றன. இதே நிலைமை நீடித்தால் அனைத்து பழங்குடியின கிராமங்களிலும் ஏறுமாடம் அமைக்கும் நிலைமை ஏற்படும்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)