`மதிமுக MLA-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்கிறாரா?' - திருமாவளவனின் பதில் என்ன?

Jun 28, 2026 - 17:01
0
`மதிமுக MLA-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்கிறாரா?' - திருமாவளவனின் பதில் என்ன?

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ``மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சரின் முடிவை விசிக சார்பில் வரவேற்கிறோம். தோழமைக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் உடனுக்குடன் பரிசீலித்து, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்து வரும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' திரைப்படத் தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டது குறித்து, அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். நியமிக்கப்பட்ட நபர் முதலமைச்சரின் நம்பிக்கைக்குரியவர் என்பதால் மட்டுமே அந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேலும், இந்த டெல்லி பிரதிநிதி பதவி என்பது மாநில ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்ட பொறுப்பு அல்ல என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, முதலமைச்சர் தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான ஒரு தோழருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

இது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் உட்கட்சி விவகாரம் சார்ந்ததாகும். யாரை நியமிக்க வேண்டும் என்கிற முழு அதிகாரமும் முதலமைச்சருக்கு இருக்கிறது. இந்த நியமனத்தால் ஆட்சி நிர்வாகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

வி.சி.க-வில் முக்கியப் பொறுப்பு வகித்த ஆதவ் அர்ஜுனா தற்போது அமைச்சராக உள்ளார். போதைப்பொருள் ஒழிப்பில் அவருக்குத் தெளிவான பார்வை இருக்கிறது. தமிழ்நாடு அரசு படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி, மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதே விசிகவின் தீர்மானம்.

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் நாடு முழுவதும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதால், மாநில அரசுகள் மட்டுமின்றி, ஒன்றிய அரசும் இணைந்து 'தேசிய மதுவிலக்குக் கொள்கையை' வரையறுத்து அமல்படுத்த வேண்டும்.

திருமாவளவன், வைகோ
திருமாவளவன், வைகோ

வைகோ முன்வைத்த செய்திகள் குறித்து வைகோ-விடமும், தி.மு.க-விடமும்தான் கேட்கவேண்டும். ம.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை விஜய் ராஜினாமா செய்ய சொல்லியிருப்பது பற்றிக் கருத்து கூற விரும்பவில்லை. தேர்தல் காலத்திற்கு முன்பாக என்னை வைத்து தி.மு.க கூட்டணியை உடைக்கப் பல சூழ்ச்சிகள் நடந்தன. அதற்கு நான் இணங்கவில்லை.

தேர்தல் முடிந்த பின்னர், இந்த நிலவரத்தில் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னை போன்றவர்களுக்கு இல்லை. அதற்கான வலிமையும் எனக்கு இல்லை. எனவே, கூட்டணி குறித்த விவாதங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் தி.மு.க தலைமைக்குத்தான் உள்ளது'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User