`சங்கிலியில கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க' தாயின் 23 வருட தவிப்பு; பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த மகன்

Aug 02, 2026 - 20:02
0
`சங்கிலியில கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க' தாயின் 23 வருட தவிப்பு; பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த மகன்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி, பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த தனது மகனை அவரது தாய் மீட்டு வந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், கோவையில் அரங்கேறியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சுந்தரி மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி இருவரும் தங்களின் இரண்டு மகன்களுடன் கடந்த 2000-ம் ஆண்டு பிழைப்புத் தேடி கோவை வந்தனர்.

கோவை சாய்பாப காலணியில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்போடு இடைநின்ற பிரகாசம், சிறு சிறு கூலி வேலை செய்து வந்தார். பின் தனது 16 வயதில் வேறு வேலையை தேடி வீட்டை விட்டு வெளியேறினார்.

மாயமான பிரகாசத்தை பல ஆண்டுகளாக சுந்தரி, அவரது கணவர், இளைய மகன் பிரபு ஆகிய மூவரும் தேடி வந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பஞ்சாபில் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதை ஒரு தொண்டு நிறுவனம் மூலம் தெரிந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, பிரகாஷ் 3-ம் வகுப்பு வரை படித்த பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உதவியுடன் பஞ்சாப் சென்ற சுந்தரி, அங்கு பரிதாப நிலையில் இருந்த தனது மகனை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தார்.

பிரகாசத்தின் தாயார் சுந்தரி கூறியதாவது :

``பிரகாசம் காணாமல் போன நாளிலிருந்து நிறைய இடங்களில் தேடினேன். தொலைந்து போன இரண்டு மாதத்திற்கு பிறகு சென்னையில் இருந்து என்னிடம் பேச டெலிபோன் பூத் மூலம், வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடைக்கு போன் பண்ணினான். ஆனால் கடையில் போய் பேசுவதற்குள் போன வச்சிட்டான்.

சரி நம்ம புள்ள எதோ ஒரு டீ கடையிலயோ, எங்கனயாவது வேல பார்த்துட்டு திரும்பி வந்துருவான்னு நெனச்சேன். ஆனா அதுக்கு அப்பறம் எந்த தகவலும் இல்ல. தினமும் ரோட்ல யாராவது படுத்திருந்தா நம்ம மகனா தான் இருக்கும், சோறு இல்லாமல் இருப்பான்னு ஆவலோடு ஓடி போய் பார்ப்பேன். ஆனா அவனாக இருக்கமாட்டான். அதனால் தேடுறதையே கைவிட்டுட்டேன். எங்காவது உயிரோடு தான் பிரகாசம் இருப்பான்னு மனச தேத்திக்கிட்டேன்" என்றார்.

பின் கொரோன காலத்தில் தனது கணவரை இழந்த சுந்தரிக்கு மீண்டும் தனது மகன் நியாபகம் சுழல ஆரம்பித்தது.

எங்காவது உயிரோடிப்பான் என்று தன்னை தேற்றிக்கொண்டார். பின் பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பார்டரில் உள்ள அஜ்னாலா எனும் ஊரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரகாசம் கொத்தடிமையாக இருந்தது தெரிய வந்தது.

பஞ்சாப் மாநிலம், பட்டியாலவில் உள்ள 'அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி' என்கிற தொண்டு நிறுவனம் அவரை மீட்டதாக சுந்தரிக்கு தெரிவிக்கப்பட்டது. பின் பத்திரிகையாளர் ஒருவரின் உதவியின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியின் மூலம் சுந்தரி பஞ்சாப் சென்றார். அங்கு பிரகாசத்தை கட்டியணைத்து அழுத தாயிடம் அவர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார். பின்னர் கோவைக்கு அழைத்து வந்தனர்.

நம்மிடையே சுந்தரி பேசியதாவது :

"அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்று கேட்டவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவன சங்கிலியால கட்டிப்போட்டு வச்சிருந்தாங்கனு சொன்னது ரொம்ப கோபமாகவும் வருத்தமாவும் இருந்துச்சு. 16 வயசுல போனான், அப்போ பண்ண முடியாதத இப்போ நல்ல துணி வாங்கி குடுத்து நல்ல சாப்பாடு செஞ்சு குடுக்கணும். அவனை இனி நல்லா பாத்துக்கணும்" என்று கூறினார்.

அவர் சகோதரர் பிரபு பேசியதாவது :

"பிரகாசம் இவ்ளோ நாள் இல்லாம இருந்தது, ரொம்ப கவலையா இருந்துச்சு. அவன் திரும்ப கெடச்சது, சந்தோஷமாக இருக்கு. சின்ன வயசுல அண்ணனுக்கு எதுமே பண்ணுனதில்லை. இப்போ நான்தான் அவனுக்கு எல்லாமே பண்ணனும். ஊருக்கு போய் நண்பர்களை காட்டனும், கோவில்களுக்கு சுற்றுலாத் தலங்களுக்கு அவன கூட்டிட்டு போய் சுற்றி காட்டணும்" என்று எதிர்கால விஷயங்களை பற்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User