ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக்

Apr 24, 2026 - 21:03
 0
ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக்

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் அபுதாபியின் வெளிநாட்டு உதவி நிறுவனம், 'அபுதாபி மேம்பாட்டு நிதியம் (ADFD)'.

'The Dawn Newspaper' தகவலின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிதியத்திடமிருந்து 2019-ம் ஆண்டு இந்தக் கடனை வாங்கியிருக்கிறது பாகிஸ்தான்.

ஈரான் போரினால் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அரசியல் தொடங்கி பொருளாதாரம் வரை பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

இதனால், அபுதாபி மேம்பாட்டு நிதியம் பாகிஸ்தானிடம் அவர்கள் வாங்கியிருந்த மொத்த கடன் தொகையையும் திருப்பிச் செலுத்துமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

கடன்
கடன்

இதனையடுத்து, பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், மொத்த கடன் தொகையான 3.45 பில்லியன் டாலர்களையும் அந்த நிதியத்திற்கு திருப்பிச் செலுத்தியிருக்கிறது.

திருப்பி செலுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தனது எக்ஸ் பக்கத்தில், "அபுதாபி வளர்ச்சி நிதியத்திற்கு செலுத்தவேண்டிய 1 பில்லியன் அமெரிக்க டாலர் டெபாசிட்டை, பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஏப்ரல் 23, 2026-ம் தேதி திருப்பிச் செலுத்தியது.

கடந்த வாரம் 2.45 பில்லியன் டாலர் வைப்புத்தொகை திருப்பிச் செலுத்தப்பட்டது. இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கவேண்டிய மொத்த வைப்புத்தொகையான 3.45 பில்லியன் டாலர் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானிற்கு ஏது இந்தப் பணம்?

இதுவும் கடன்தான். சமீபத்தில், சவுதி அரேபியாவிடமிருந்து பாகிஸ்தான் இரண்டு தவணைக் கடன் பெற்றிருந்தது. அதன் இரண்டாம் தவணையான 1 பில்லியன் டாலர் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பாகிஸ்தான் கைகளுக்குக் கிடைத்தது.

இதை வைத்துதான் நேற்று கடனை முழுவதுமாக அடைத்து முடித்துள்ளது பாகிஸ்தான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0