IND Vs IRE: உலக சாம்பியனை உலுக்கிய அயர்லாந்து... 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்தியா!

Jun 29, 2026 - 11:31
0
IND Vs IRE: உலக சாம்பியனை உலுக்கிய அயர்லாந்து... 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்தியா!

இருபது ஓவர் கிரிக்கெட் என்றால் இனி இந்திய அணி மட்டும்தான் என்று சொன்ன ரசிகர்களின் தலையில் எல்லாம் இப்போது துண்டைப் போட்டு அமர வைத்துள்ளது, அயர்லாந்து கிரிக்கெட் அணி.

"உலக சாம்பியனுக்கு வந்த நிலைமையா இது?" என்கிற குமுறல் சமூக வலைதளங்கள் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பல மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, தொடரை இழந்துள்ளது.

ஐபிஎல்-ல் ஆடிய அதே வேகத்துடன் அயர்லாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்தது அயர்லாந்து மைதானம். எந்தப் பந்து வீசினாலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது அயர்லாந்து அணி.

ஐபிஎல் பிட்ச்களுக்கும் வெளிநாட்டு மைதானங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான். பவர் பிளேவிற்குள்ளேயே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்து, 'டீசன்ட்டான ஸ்கோர் சேர்ப்போம்' என்பதுதான் இந்தத் தொடரில் இந்தியாவின் பாணியாக இருந்தது.

ரோஹித் சர்மாவின் அந்த நிதானமான கேப்டன்ஷிப்பும், விராட் கோலியின் நிலைத்து ஆடும் ஆட்டமும் இந்த அணியில் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் நமக்குக் காட்டியது.

விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்து விழும்போது, பதற்றப்படாமல் ஆட்டத்தை அப்படியே ஹோல்ட் செய்து, பார்ட்னர்ஷிப் அமைக்கும் திறன் எந்த ஒரு இளம் வீரரிடமும் கடுகளவும் தென்படவில்லை.

பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தவுடனே, அடுத்தடுத்து வந்தவர்கள் அதிரடி காட்டுகிறேன் என்று தேவையில்லாத ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளைத் தாரைவார்த்தனர். டி20 என்பது வெறும் சிக்ஸர் அடிக்கும் ஆட்டம் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப விவேகத்தைப் பயன்படுத்தும் ஆட்டம் என்பதை நம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுத்தமாக மறந்துவிட்டார்கள்.

அதே நேரத்தில், அயர்லாந்து அணியைப் பாராட்டியே ஆக வேண்டும். உலக சாம்பியனான இந்திய அணியை, தனது சொந்த நாட்டில் வைத்து வெல்வது என்பது மிகப் பெரிய சவாலானது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

யாருக்கு எங்கு பந்து வீச வேண்டும், எந்தத் திசையில் ஃபீல்டிங்கை நிறுத்த வேண்டும் என்பதில் அவர்கள் காட்டிய திட்டமிடல், உலக சாம்பியன்களையே நிலைகுலையச் செய்துவிட்டது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது அயர்லாந்து அணி.

சாம்பியன் மகுடத்தைச் சூடிக்கொள்வது எவ்வளவு கடினமோ, அதைத் தக்கவைத்துக் கொள்வது அதைவிடக் கடினம். இந்தத் தோல்வியில் இருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த இங்கிலாந்துத் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என்று நம்புவோம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User