`கேரளத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல முயன்றால் குண்டர் சட்டம் பாயும்'- குமரி எஸ்.பி அதிரடி!

Jul 30, 2026 - 00:32
0
`கேரளத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல முயன்றால் குண்டர் சட்டம் பாயும்'-
குமரி எஸ்.பி அதிரடி!

விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர். குறிப்பாக விபத்தை ஏற்படுத்தும் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இருந்து வண்ண விளக்குகள் போன்றவற்றை போலீசார் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் வாகனங்கள் இயக்கினால் அவர்களது பெற்றோர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கனரக வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் வகையில் ஏஐ கேமரா நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிக்னலில் பொருத்தப்பட்டுள்ளது. காவல் ஏஐ என பெயரிடப்பட்ட இந்த கேமராக்கள் மூலம் ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து, தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காவலர்கள் நின்று அபராதம் விதிப்பது தெரிந்தால் ஹெல்மெட் இல்லாத நபர்கள் வேறு வழியாக பயணிக்கும் நிலைமையை தவிர்த்து, பொதுமக்கள் ஹெல்மெட் அணியத்தொடங்கி உள்ளனர். காவல் ஏஐ திட்டம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் மேலும் 10 இடங்களில் ஏஐ கேமரா பொருத்தப்பட்டு இன்று செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

காவல் ஏஐ திட்டத்தை தொடங்கிவைத்த எஸ்.பி ஸ்டாலின்

காவல் ஏஐ கேமராக்களின் செயல்பாடுகளை நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் டாக்டர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிவேகம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் இந்த ஏஐ கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் சந்திப்பில் இந்த கேமரா பொருத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 4500 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியும் பழக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 300 பேர் விபத்துகளில் பலியாகின்றனர். அதில் 70 சதவீதம்பேர் ஹெல்மெட் அணியாத காரணத்தால் மரணமடைந்துள்ளனர். தற்போது இரண்டாம் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய 10 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது எங்கள் நோக்கம் இல்லை. விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவதற்காக காவல்துறையினர் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

காவல் ஏஐ கண்காணிப்புத்திட்டம்

கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்காக எல்லையோர பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல முயன்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும்" என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User