பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

Jun 29, 2026 - 16:32
0
பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா (5) ஆகிய இரட்டை குழந்தைகள். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு குழந்தைகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மொஹரம் மற்றும் வார விடுமுறையினை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரண்டு குழந்தைகளுடன் செல்வி, தனது தந்தை முத்துமுருகன் வீட்டுக்கு வந்துள்ளார். அன்று இரவு வீட்டில் இரு குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்த நிலையில், வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டுத் தூங்கி உள்ளார் செல்வி.

கொலை செய்யப்பட்ட சிறுமி சாய் தீப்தி

அதிகாலையில், எழுந்து பார்த்த போது தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையான சாய் தீப்தியைக் காணவில்லை. இதையடுத்து செல்வியும் அவரின் தந்தையும் மாயமான குழந்தையை அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடினர். அப்போது அந்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இறந்த நிலையில்  குழந்தை சாய் தீப்தியின் உடல் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் பிணமாக மிதந்தது குறித்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிறுமியை அவரின் அத்தை சபரிதா என்பவர் கிணற்றில் வீசி கொலைசெய்திருப்பது தெரியவந்தது. உயிரிழந்த சிறுமியின் தாய் மாமா அஜீத், சபரிதாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று உள்ளது.

சிறுமியை கொலை செய்த அத்தை சபரிகா

இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அஜீத் – சபரிதா தம்பதியினர் மீது அஜீத்தின் குடும்பத்தினர் அக்கறை இன்றி இருந்துள்ளனர். மேலும் அஜீத்தின் குழந்தை மீது பாசம் காட்டாத தாத்தா - பாட்டி ஆகிய இருவரும், தங்களது மகளான செல்வியின் குழந்தைகள் மீது அதிக பாசம் காட்டியுள்ளனர்.

இதனால் வெறுப்பில் இருந்து வந்த சபரிதா, சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி சாய் தீப்தியை தூக்கிச் சென்று கிணற்றில் போட்டுக் கொலை செய்துள்ளார். விசாரணையின்போது போலீஸாரிடம் சபரிதா இதனை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைதுசெய்தனர். மாமியார் மாமனார் மீது இருந்த ஆத்திரத்தில் 5 வயதே ஆன சிறுமியை சீராட்டி பாசம் காட்ட வேண்டிய அத்தையே கொலைசெய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User