``தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு இங்கு வர வேண்டாம்" - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

Jul 31, 2026 - 15:01
0
``தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு இங்கு வர வேண்டாம்" - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி நீர் விவகாரம் சிக்கலாகிக்கொண்டே வருகிறது. வழக்கமாகத் திறக்கப்படும் தண்ணீரை கர்நாடகா இதுவரை திறந்துவிடவில்லை. திறப்பதற்கான சாத்தியங்களைக்கூட கர்நாடகா யோசிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், ``தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்கள் தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும். இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் தமிழ்நாட்டு எல்லைக்குள் வரவில்லை.

டி.கே.சிவக்குமார் - விஜய்
டி.கே.சிவக்குமார் - விஜய்

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில், கர்நாடகாவில் காவிரி நீர் நிலவரத்தை ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சில பரிந்துரைகளும், தற்போதைய நிலைமை மற்றும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், கர்நாடகாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

மேலும், காவிரி நீர் விவகாரம் மற்றும் மாநிலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, பெங்களூருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லமான 'கிருஷ்ணா'வில் ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில், காவிரிப் படுகைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிவக்குமார் ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யைச் சந்திப்பதாக இருந்தது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

இதற்கிடையில், தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதாக கர்நாடகா தரப்பிலிருந்து கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், ``தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களை வேறொரு தேதியில் சந்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சூழல் சுமுகமாக இருக்க வேண்டும். நாம் யாருக்கும் மனவேதனை அளிக்கக் கூடாது. ஒரு விருந்தினர் வரும்போது, ​​அவரை நாம் கண்ணியமாக நடத்த வேண்டும். ஆகஸ்ட் 3-ம் தேதி விஜய் வருவதற்கான ஏற்பாடுகளை அரசு ஏற்கெனவே செய்திருந்தாலும், அவரது வருகையை ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User