'3000 வருடங்கள் பழமை; 50 கல் வட்டங்கள்!' - கரூரில் பழந்தமிழரின் வரலாற்று சுவடு

Jul 31, 2026 - 13:02
0
'3000 வருடங்கள் பழமை; 50 கல் வட்டங்கள்!' - கரூரில் பழந்தமிழரின் வரலாற்று சுவடு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கீழ் முனையனூர் பகுதியில் உள்ள பூவம்பாடி தனிகாட்டு கருப்பண்ண சாமி கோவில் பின்புறமுள்ள ஒரு தரிசு நிலத்தில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

kal vattangal

ஏற்கனவே, இத்தகைய கல்வட்டங்கள் ஆற்றுப்படுகையில் ஒட்டிய கொடுமணல், சானூர், சின்னவாசல், மதுரை குப்பால் நத்தம் போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம், கல்வட்டங்கள் பெரிய மற்றும் நடுத்தரமான சிறிய கற்களை வைத்து கல்வட்டங்கள் இருப்பதை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில 50 கல் வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் தங்கள் தலைவர்கள் அல்லது மூத்த முன்னோர்களை இறந்த பின்னர் நடுவிலே புதைத்து, அங்கு ஒரு பெரிய கல்லை வைத்து சென்றுள்ளனர். அத்தகைய, கல்வட்டம் ஒரு பெரும் கற்கால ஈம சின்னம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் பெரும்பாலும் தாழிகள், கற்பதுகைகள்,கொண்டு புதைக்கப்பட்டிருக்கலாம்.

aaivu

பெரும்பாலும் இவை பாதுகாக்கும் அடையாள அமைப்பாக இருப்பதால் இந்த இடம் தோண்டப்படாமல் பாதுகாக்கப்படும் இடமாக உள்ளது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையான இந்த அரிய வகை கல்வட்டங்கள், ஏற்கனவே தமிழகத்தின் முக்கிய தொல்லியல் தளமாக உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டறியப்பட்ட கல்வட்டங்களைப் போலவே வட்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கல்வட்டங்கள் அமைப்பு முறை கண்டறியப்பட்ட இடத்தை, கரூர் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் நந்தகுமார் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

aaivu

சம்பந்தப்பட்ட நிலமானது கிருஷ்ணராயபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 1.98 ஏக்கர் நிலம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். மேலும், அதைச் சுற்றி உள்ள நிலங்களை பார்வையிட்ட அவர்கள், வருவாய்த்துறை ஆவணங்களில் அடிப்படையில் ஆய்வு முடிவுற்றதும் அரசுக்கு அறிக்கையானது அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுபற்றி தொல்லியல் ஆர்வலர்கள் சிலர்,

"இது போன்ற கல்வட்டங்கள் இன்று புதிதாக கண்டறியப்பட்டதல்ல. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டு வருகிறது. கரூர் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் கீழ் முனையனூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட கல்வட்டங்கள் தமிழர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.

aaivu

குறிப்பாக, எகிப்திய நாகரிகங்களுக்கு முன்னதாக தமிழர்களின் நாகரிகங்கள் பரவலாக உள்ளது என்பதற்கான ஆதாரங்களாக கல்வட்டங்கள் இருக்கின்றன. இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை மிக விரைவாக ஆய்வுகள் மேற்கொண்டு தமிழர்களின் வரலாற்றை முழுமையாக இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User