``வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அமித் ஷா பதவி விலகவேண்டும்!" - CJP அபிஜித் தீப்கே

Jul 31, 2026 - 16:01
0
``வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அமித் ஷா பதவி விலகவேண்டும்!" - CJP அபிஜித் தீப்கே

தனது கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விளக்கமளித்திருக்கிறார், அபிஜித் தீப்கே.

இது தொடர்பாக நேற்று மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, ``சட்டம்-ஒழுங்கு, மாணவர் நலன் மற்றும் காவல் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதாக என் கட்சிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒருவேளை உண்மையாக இருந்தால், அது மத்திய உள்துறை அமைச்சரின் தோல்வியையே காட்டுகிறது.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றால், அது அவருடைய தோல்விதான். உங்கள் கண்காணிப்பில் ஒரு கட்சி வெளிநாட்டிலிருந்து நடத்தப்படுகிறது என்றால், நீங்கள் எத்தகைய 'சாணக்கியர்?' உங்களுக்கு அந்தப் பதவி எப்படிச் சரியானதாக இருக்கும்? அப்படியானால் நீங்கள் பதவி விலக வேண்டும்.

தர்மேந்திர பிரதான் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மற்றொரு நபர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அரசிடம் என்ன மாற்றுத் திட்டம் உள்ளது? போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கேலி செய்யும் முயற்சிகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவைப்படும் போதெல்லாம் விவசாயிகளுடன் உறுதியாக நிற்பேன். விவசாயத் தலைவர்கள் அளித்த ஆதரவையும் ஏற்றுக்கொண்டேன். பா.ஜ.க-வில் இணைய வேண்டும் என எனக்கு அழைப்பு வந்தது. அது ஒருகட்டத்தில் மிரட்டல்களாக மாறின.

ஆனால், வாய்ப்பு கிடைத்தாலும் நான் பா.ஜ.க-வில் இணையமாட்டேன். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எனது தலைமுறை மக்களை அச்சுறுத்துகின்றனர்.

அமித் ஷா
அமித் ஷா

வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளின் கவலைகள் போன்ற முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயல்கிறது.

டெல்லி காவலர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும் அல்லது தங்கள் காக்கி நிற நீண்ட கால்சட்டையைக் கழற்றிவிட்டு, காக்கி நிற அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு பா.ஜ.க தலைமையகத்திற்கு வெளியே முழக்கங்களை எழுப்பலாம்.

போராட்டத்திற்கு முன்னதாகவே கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டதை நான் பார்த்தேன். ஆனால், மாணவர்கள் மீது பழிபோட காவல்துறை திட்டமிட்டிருந்தது. இப்படித்தான் இந்த முழு நடவடிக்கையும் காவல்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User