தவெக: `அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம்!' - வழக்கு தொடுத்த பெண் நிர்வாகிக்கு கட்சி பதிலடி

Jul 07, 2026 - 10:30
0
தவெக: `அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம்!' - வழக்கு தொடுத்த பெண் நிர்வாகிக்கு கட்சி பதிலடி

முன்பே சொன்ன ஜூ.வி

`ஊழலற்ற நேர்மையான ஆட்சி’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது த.வெ.க. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒருசில தினங்களிலேயே அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியதாகப் புகார்கள் எழுந்தன.

அதையடுத்து கடந்த 24.05.2026 தேதியிட்ட ஜூ.வி இதழில், `ஆவின் தலைவர் பதவி ரூ.50 லட்சம்… அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம்… வசூல் சர்ச்சையில் த.வெ.க மாவட்டச் செயலாளர்’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகன் மீதுதான் தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ஞானசௌந்தரி.

விஜய், மோகன்ராஜ்

அதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, தகித்துக் கொண்டிருக்கிறது த.வெ.க. அந்த ஆடியோவில், `நான் எவ்வளவு கஷ்டப்படற குடும்பம் தெரியுமா? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் நான்.

தளபதி வெற்றிபெற்றதும், அவர் எனக்காகவே வெற்றிபெற்றதாக நினைத்தேன். ஏனென்றால் நாம் அரசு தரப்பு வழக்கறிஞராவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் (குஷி மோகன்) என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அ.தி.மு.க, தி.மு.க-வில் அந்தக் கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம் கட்சியில்தான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள்’ என்று நீள்கிறது அந்த ஆடியோ.

`தி.மு.க, அ.தி.மு.க செய்யாததைச் செய்கிறார்கள்!’

இதுகுறித்து ஞானசௌந்தரி தரப்பில் பேசியபோது, ``தளபதி கட்சி ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 11 வழக்கறிஞர்கள் தேவை என்று கேட்டார்கள். ஆனால் அப்போது விழுப்புரத்தில் ஞானசுந்தரி உட்பட நான்கு பேர்தான் ரசிகர்கள் என்ற முறையில் பெயர் கொடுத்தார்கள்.

அதில் மூன்று பேர்தான் சீனியர். எங்களுடன் ஏழு ஜூனியர் வழக்கறிஞர்களை சேர்த்து, ஆன்லைனில் அப்லோட் செய்தோம். அப்போது அனைத்து செலவுகளையும் அவர்கள்தான் செய்தார்கள்.

தவெக நிர்வாகி வழக்கறிஞர் ஞானசௌந்தரி

இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் விழுந்தன. அதற்கும் அவர்கள்தான் ஆஜரானார்கள். அப்படி இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டு, அரசு வழக்கறிஞராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேரை போட்டிருக்கிறார் `குஷி’ மோகன். ஒரு நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கிக் கொண்டுதான் நியமித்திருக்கிறார்கள்” என்றனர்.

`கட்சிக்கு உழைக்கவும் இல்லை… எந்தப் பொறுப்பிலும் இல்லை…!’

இந்த விவகாரம் குறித்து மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகனிடம் கேட்டபோது, ``எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தளபதி ஆட்சி வந்ததில் இருந்து அனைத்தும் சட்ட விதிகள்படி நேர்மையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி அரசு வழக்கறிஞர் நியமனமும் அப்படித்தான் நடைபெறும். ஆனால் அந்த நியமனம் இன்னும் நடைபெறவே இல்லை. அதற்குள் இப்படி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கட்சிக்காக அவர் உழைக்கவும் இல்லை.

தேர்தல் நேரத்தில் அவர் பிரசாரம் செய்வதைப் போல ஒரு போட்டோ இருந்தால் காட்டச் சொல்லுங்களேன் பார்க்கலாம்” என்றவரிடம், `ஆனால் ஞானசௌந்தரி விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக இருப்பதாக தெரிவித்திருகிறாரே?’ என்று கேள்வி எழுப்பினோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதற்கு, ``வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் எந்தப் பொறுப்பையும் அவருக்கு வழங்கவில்லை. இப்போது தளபதி ஆட்சி அமைந்ததும், இப்படி ஒரு வாய்ப்பிருக்கிறது எனக்கு கொடுங்கள் என்று கேட்டார்.

மற்ற கட்சிகளில், அந்தந்த கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுப்பார்கள் என்றார். உங்கள் கோரிக்கையை தலைமைக்கு தெரிவிக்கிறேன் என்று கூறிவிட்டேன். இப்போது அந்த ஆடியோவில் கூட அவர், அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு பணம் வாங்குவதாக பேசிக் கொள்கிறார்கள் என்றுதான் கூறுகிறார். பெண் என்பதால் அவர் மீது நாங்கள் எந்த வழக்கையும் போடவில்லை” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User