`Last Bench' சர்ச்சை: "நானே அரசுப் பள்ளி மாணவிதான்" - அமைச்சர் கீர்த்தனாவின் விளக்கம் என்ன?

Jul 07, 2026 - 10:01
0
`Last Bench' சர்ச்சை: "நானே அரசுப் பள்ளி மாணவிதான்" - அமைச்சர் கீர்த்தனாவின் விளக்கம் என்ன?

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அவர் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் மாணவி ஒருவருக்கு ஆங்கிலம் வரவில்லை என்று ஆசியரிடம் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக, கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று சிலர், "அரசுப் பள்ளி மாணவியைக் கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையைப் பரப்புகிறார்கள்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.

இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னைக் கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.

நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.

கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.

இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசுப் பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?

ஒரு அரசுப் பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.

என்னை விமர்சியுங்கள். என் பணியைக் கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையைக் கேலி செய்யாதீர்கள்.

மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.

இன்னொரு கேள்வி...

இன்று என்னைக் கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?

அரசுப் பள்ளியை நம்பாதவர்கள், அரசுப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணைக் கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசுப் பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்" என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User