C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

Jun 11, 2026 - 16:32
0
C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக 2021-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து நேரடியாக வாங்கப்படும், மீதமுள்ள 40 விமானங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

அந்த 40 விமானங்களில் முதல் விமானம் தற்போது முழுமையாகத் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பறந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

C-295 aircraft Make in India
C-295 aircraft Make in India

இந்தியாவில் இதுவரை போர் விமானங்கள், ராணுவ விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் போன்ற அரசு நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன.

முதல்முறையாக ஒரு இந்திய தனியார் நிறுவனம் (டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் - TASL) ராணுவ விமானத்தை இந்தியாவிலேயே தயாரிப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை.

இந்த C-295 ஒரு நடுத்தர ரகப் போக்குவரத்து விமானம். இதில் ஒரே நேரத்தில் 70 ராணுவ வீரர்கள் அல்லது 48 பாராசூட் வீரர்கள் முழு ஆயுதங்களுடன் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 9,000 கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

போர், பேரிடர் காலங்களில் அனைத்து இடங்களிலும் சரியான விமான ஓடுதளங்கள் இருக்காது. இந்த விமானத்தின் சிறப்பம்சமே, கரடுமுரடான, குறுகிய, மண் சார்ந்த ஓடுதளங்களில் கூட இதனால் எளிதாகத் தரையிறங்கவும், புறப்படவும் முடியும். இந்தியாவின் இமயமலை எல்லைகள், அந்தமான் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பேரிடர் அல்லது போர்க் காலங்களில் காயமடைந்த வீரர்களை மீட்கும் பணிக்காக இந்த விமானத்திற்குள் 24 படுக்கைகள் வரை அமைத்து தீவிர சிகிச்சைப் பிரிவாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

C-295 aircraft Make in India
C-295 aircraft Make in India

இந்த 40 விமானங்களை உருவாக்குவதற்குத் தேவையான சுமார் 13,000 உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டாடா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்த விமானம் தயாரிக்கப்பட்ட வதோதரா தொழிற்சாலையை அக்டோபர் 2024-ல்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் இணைந்து திறந்து வைத்தனர். திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே முதல் விமானம் உற்பத்தி செய்யப்பட்டு பறக்கத் தயாராகியுள்ளது.

C-295 aircraft Make in India
C-295 aircraft Make in India

இதுவரை அதிநவீன ராணுவப் போக்குவரத்து விமானங்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா என வெளிநாடுகளையே நம்பியிருந்த நிலை மாறி, இந்தியாவிலேயே அவற்றை உற்பத்தி செய்யும் வல்லமையை நாம் அடைந்துள்ளோம் என்பதை இந்த C-295 விமானத்தின் வெற்றி உலகிற்கு நிரூபித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த முதல் விமானம் அதிகாரபூர்வமாக இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என்பது நம் எல்லோருக்கும் பெருமைக்குரிய விஷயம்தான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User